10/12/2025
லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையம் – சான்றிதழ் வழங்கும் விழா
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - கோவை பெருநகரத்தின் கீழ் செயல்படும் லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 10 டிசம்பர் 2025 அன்று நடைபெற்றது.
சமூகத்தில் நலிவடைந்த பெண்களுக்கு திறன் மேம்பாடு, வருவாய் வாய்ப்பு, சுயநம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த மையம், கோவையில் நான்கு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு, பல நூறு பெண்களை வாழ்க்கை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தி வருகிறது.
இந்த ஆண்டும், நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலரும், துணை ஆட்சியருமான திருமதி. N.A. சங்கீதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வின் தொடக்கமாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை பெருநகர தலைவர் திரு. P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார் . அவர் தனது உரையில், பெண்களின் முன்னேற்றம் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்தினார். மேலும் லிபாஸ் பயிற்சி மையம் வழியாக திறன் பெற்ற பெண்கள், சமூகத்தில் முன்னேற விரும்பும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என ஊக்கமளித்தார்.
தொடர்ந்து, கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலரும் துணை ஆட்சியருமான திருமதி N.A. சங்கீதா அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் மக்கள் சேவை முயற்சிகளை பாராட்டியதோடு, பெண்கள் தொழில்முனைவு, திறன் மேம்பாடு, சந்தை வாய்ப்புகள் போன்ற துறைகளில் பல பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.
தொடர்ந்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கப்பட்டது. பெண்கள் பெரும் மகிழ்ச்சியோடு சான்றிதழ்களைப் பெற்றதோடு, அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் மீது கொண்ட அன்பு மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி தலைவர். திருமதி. ஜஹீனா அஹமது அவர்களும், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துணைத் தலைவர் ஆலிமா. சலீனா பாரி அவர்களும், ஜமாஅத் மக்கள் தொடர்பு செயலாளர் திரு. அப்துல் ஹக்கீம் அவர்களும், கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் சுயதொழில் உதவிக் குழு செயலாளர் திரு.சாகுல் ஹமீத் அவர்களும், பல்வேறு முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.