14/05/2026
திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்
திருச்சியில் இன்று (மே.14) எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, ஹமீது ஃப்ரோஜ், நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க், மாநில பொருளாளர் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞரணி, எஸ்டிடியூ தொழிலாளர் அணி உள்பட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், நடப்பு அரசியல் சூழல்கள் மற்றும் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*தீர்மானம் 1:*
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தீவிரமாகக் களப்பணியாற்றிய எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் கூட்டணிக்காக 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றிய கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.
*தீர்மானம் 2:*
தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உயர்திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் இந்த கூட்டம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
புதிய அரசு, அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் பாரபட்சமின்றி, தமிழகத்தின் நலன், மக்கள் வாழ்வாதாரம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். முந்தைய அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் தொய்வின்றித் தொடர வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மேலும், தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்; குறிப்பாக, நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அத்துடன், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
*தீர்மானம் 3:*
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் அமைச்சரவையில், இதுவரை 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள போதிலும், அவர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பது அரசு நிர்வாகப் பணிகளில் தேக்கத்தையும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நிர்வாக நடைமுறைகள் தடையின்றி நடைபெற ஏதுவாக, பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு உடனடியாக இலாக்காக்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
*தீர்மானம் 4:*
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' முறையைப் பின்பற்றுதல், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்தல் போன்ற பிரதமரின் அண்மைய ஆலோசனைகள் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, லாக்டவுன் போன்றதொரு நிலையை மீண்டும் பின்பற்றச் சொல்வது போன்ற அரசின் இந்த அறிவுறுத்தல்கள், நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறதோ என்ற ஐயத்தை நடுத்தர வர்க்கத்தினரிடையே விதைத்துள்ளன.
இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரான் மீதான போர் உள்ளிட்ட சர்வதேசச் சூழலால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று கூறிவிட்டு, தற்போது மக்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்களில் இத்தகையக் கட்டுப்பாடுகளைக் கோருவது முரணாக உள்ளது. எனவே, நாட்டின் உண்மையான நிதி நிலை குறித்து நிலவும் அச்சத்தைப் போக்க, ஒன்றிய அரசு உடனடியாக ஒரு தெளிவான 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
*தீர்மானம் 5:*
தமிழகச் சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யத் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். தற்போது அவர்களின் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளதால், சிறைவாசிகளின் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். எனவே, பேரறிவாளன் வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டும், இவர்களுக்கும் உடனடியாக நீண்டகாலப் பரோல் வழங்கிடவும், எவ்விதப் பாரபட்சமுமின்றி இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.