17/03/2026
'சீட்டு முக்கியமில்லை.. கொள்கையே முக்கியம்- தி.மு.க.வுக்கு கெடு விதித்த வேல்முருகன்': அ.தி.மு.க. பக்கம் தாவுகிறதா த.வா.க.?
பாஜக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இடம் பெற மாட்டோம். ஆனால், அதிமுக எங்களது கோரிக்கைகளை ஏற்று எங்களை அழைத்தால், அது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக, தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது;
"தமிழக வாழ்வுரிமை கட்சி என்பது வெறும் தேர்தல் அரசியலுக்காகவோ அல்லது அதிகாரப் பங்கீட்டிற்காகவோ உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதையே லட்சியமாகக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக நாம் பயணித்து வருகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டு காலமாக ஒரு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக சமரசமின்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், தற்போதைய சூழலில் நிலவும் சில அரசியல் எதார்த்தங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
அரசியல் அங்கீகாரம் மறுக்கப்படுகிறதா?
கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு உரிய இடங்களும், அதிகாரத்தில் உரிய பங்கும் அளிக்கப்படும் என்று திமுக தலைமையால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடலூர் மேயர் பதவி, துணை மேயர் பதவி மற்றும் பல்வேறு நகராட்சித் தலைவர் பதவிகள் என எமது கோரிக்கைகள் எவையும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
இப்போது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும், 'கூடுதல் இடங்கள் தர முடியாது, ஏற்கனவே நின்ற எண்ணிக்கையிலேயே நில்லுங்கள், இன்னும் சொல்லப்போனால் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று திமுக பேச்சுவார்த்தைக் குழு சொல்கிறது. இது எங்களுக்குப் பெரும் வருத்தத்தைத் தருகிறது.
எங்களுக்குச் சீட்டு முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம்:
எங்களைப் பொறுத்தவரை 'சீட்' என்பது இரண்டாம் பட்சம் தான். தமிழ் சமூகத்தின் நீண்டகாலப் போராட்டங்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும். அதற்காக 10 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்:
பீகார், கர்நாடகாவைப் போலத் தமிழகத்திலும் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே வேலை என்பதைச் சட்டமாக்க வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத் தமிழர்களையும், நீண்டகால இஸ்லாமியச் சிறைவாசிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் குறித்துத் தமிழக முதல்வர் இதுவரை எந்த உறுதியான பதிலும் எங்களுக்குச் சொல்லவில்லை.
தலைமைக்குழுவின் அதிரடி முடிவு:
இன்று எங்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூடி விவாதித்தது. அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒரு கருத்தை முன்வைத்துள்ளனர். 'இடங்களும் தரவில்லை, கொள்கைகளையும் நிறைவேற்றவில்லை என்றால், திமுக கூட்டணியில் தொடர்வதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது எங்களது கோரிக்கைகளை ஏற்கும் மாற்று அணியுடன் பயணிப்பதா? என்பது குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் 1,200-க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் எங்களிடம் வந்துள்ளன.
ஒரே ஒரு எச்சரிக்கை:
பாஜக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம். ஆனால், அதிமுக எமது கோரிக்கைகளை ஏற்று எங்களை அழைத்தால், அது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். திமுக தலைமையிடமிருந்து திங்கட்கிழமை (நாளை) வரும் பதிலைப் பொறுத்து எங்களது அடுத்தகட்ட அதிரடி முடிவு இருக்கும்.
நாங்கள் சீட்டுக்காக அலைபவர்கள் அல்ல; தமிழ் மக்களின் உரிமைக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பவர்கள். எங்கள் வலிமை என்னவென்று நெய்வேலி மண்ணிலும், கடலூர் மாவட்டத்திலும், தமிழகம் முழுவதிலும் முன்கள வீரர்களாக இருக்கும் எமது தொண்டர்களுக்குத் தெரியும்”
இவ்வாறு வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.