10/08/2026
பழனி நில மோசடி விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவரின் சிறை மரணம் குறித்து நீதி விசாரணை தேவை! - எஸ்டிபிஐ வலியுறுத்தல்
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அடிமாட்டு விலைக்குச் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் உயிரிழந்த செய்தி பெரும் ஐயங்களை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையிலேயே உயிரிழந்திருப்பதும், இவ்வழக்கின் மற்றொரு முக்கிய நபரான சார்பதிவாளர் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள ஒரு வழக்கறிஞரின் மரணம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரே வழக்கில் கைதான நபர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படும் திடீர் உடல்நலக் குறைவு மற்றும் மரணம் தொடர்பாக விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கோயில் நிலக் கொள்ளையில் ஈடுபட்டுள்ள பின்னணி நபர்கள், அவர்களுக்குத் துணைபோன அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது எவ்வித தாட்சண்யமுமின்றிச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், விசாரணை என்ற பெயரில் எவ்வித அத்துமீறல்களும் நடைபெறக் கூடாது. குற்றமற்றவர்கள் பாதிக்கப்படுவதையோ, உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மதுரை சிறையில் நடைபெற்ற அன்வர்தீனின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடுநிலையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இன்றி இந்த வழக்கு விசாரிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்."
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.