12/02/2026
வந்தே மாதரம் உத்தரவு பெரும்பான்மைவாத கலாச்சார திணிப்பைப் பிரதிபலிக்கிறது!
ஒன்றிய உள்துறை அமைச்சகம், அரசு விழாக்கள், குடியரசுத் தலைவர் நிகழ்வுகள், ஆளுநர் நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி வழிபாட்டுக் கூட்டங்களில் 'வந்தே மாதரம்' பாடலின் முழுமையான ஆறு சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கியுள்ள உத்தரவை, எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் துணைத் தலைவர் சீதாராம் கொய்வால் எதிர்க்கிறார். இந்த உத்தரவு இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் ஆன்மாவையே தாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"1937-ஆம் ஆண்டில் நிலவிய வரலாற்று ரீதியான விவேகத்தை இந்த உத்தரவு புறக்கணிக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தேசியப் பாடல் அனைத்து சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய தேசிய காங்கிரஸ் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டது. பிந்தைய சரணங்களில் துர்க்கை மற்றும் லட்சுமி போன்ற இந்து தெய்வங்கள் மற்றும் கோவில் உருவகங்கள் குறித்த வெளிப்படையான குறிப்புகள் உள்ளன. இவை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பல குடிமக்களின் மத நம்பிக்கைகளுக்கு முரணானவை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுப் பாடலையும் கட்டாயமாக்குவது மற்றும் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என வலியுறுத்துவது, குடிமக்களின் அடிப்படை உரிமையான மத சுதந்திரம் மற்றும் மனசாட்சிப்படி நடக்கும் உரிமையை மீறும் செயலாகும். நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், ஒருவரது நம்பிக்கைக்கு முரணான சடங்குகளில் பங்கேற்க யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. குறிப்பாக, பள்ளிகள் கற்றல் மற்றும் ஒற்றுமைக்கான இடங்களாக இருப்பதற்குப் பதிலாக, பிளவு மற்றும் அசௌகரியத்தை உருவாக்கும் இடங்களாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும் அவர் கூறுகையில், "இந்த உத்தரவு தேசபக்தி சார்ந்தது அல்ல; மாறாக பெரும்பான்மைவாத கலாச்சாரத்தை திணிப்பதற்கும், சிறுபான்மையினரின் விசுவாசத்தை சோதிப்பதற்கும் எடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட அரசியல் நடவடிக்கை ஆகும். தேசிய சின்னங்கள் மீதான உண்மையான மரியாதை என்பது இயல்பான ஆர்வப் பங்கேற்பு மற்றும் உரையாடல் மூலம் வளர வேண்டுமே தவிர, தண்டனை அச்சுறுத்தல் அல்லது சமூக அழுத்தத்தின் மூலம் அல்ல. ஆளும் தரப்பு மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதை விட, பிளவுபடுத்தும் அடையாள அரசியலுக்கே மீண்டும் முன்னுரிமை அளிக்கிறது" என்றார்.
"இந்தியாவின் வலிமை என்பது அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளதே தவிர, திணிக்கப்பட்ட சீரான தன்மையில் (Uniformity) இல்லை" என்று கூறிய அவர், ஒன்றிய அரசு உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். குடியரசின் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் எஸ்டிபிஐ கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்றும், உள்ளடக்கிய இந்தியாவை நம்பும் அனைத்து குடிமக்களுடனும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.