05/09/2024
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின்
153-ஆம் பிறந்த நாளில் அவரது தீரத்தையும்,
தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்!
மருத்துவர் இராம்தாஸ் அய்யா !
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் அடையாளமாகத் திகழும் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளை, நாட்டின் விடுதலைக்காக அவர் பட்ட பாடுகளையும், நடத்திய போராட்டங்களையும், அனுபவித்த கொடுமைகளும் நினைத்துப் பார்த்து நாட்டிற்காக நாமும் உழைக்க வேண்டும் என்று உறுதியேற்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்த வெள்ளையர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி அவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார்.
சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறையில் மாடுகளை விட மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் போராட்டங்களும், தியாகங்களும் போற்றத்தக்கவை. அவற்றை இந்த நாளில் நினைவு கூர்ந்து வ.உ.சி அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்!