29/07/2026
விழுப்புரத்தில் காவல்துறை அராஜகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
விழுப்புரம், 29.07.2026:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கடந்த 24.07.2026 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட வாலிபர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மீது விழுப்புரம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர்.
மக்களுக்காக போராடிய தலைவர்களை சாதியை சொல்லி திட்டி தாக்கிய விழுப்புரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் வினோத் ராஜ் ஆகியோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
CITU, AIKS, AIAWU, AIDWA, DYFI, SFIஆகிய வெகுஜன அமைப்புகளின் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று 29.07.2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் S.அறிவழகன், B.A., LLB.,அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆர்பாட்டத்தில் தோழர் P.கருப்பையன் CITU மாநில துணைத்தலைவர், தோழர் செல்வராஜ் - DYFI மாநிலத் தலைவர், தோழர் N.சுப்பிரமணியன் - CPI(M) மாவட்ட செயலாளர், தோழர் S.கீதா - CPI(M) மாநிலக்குழு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
"காவல்துறையா? காட்டுமிராண்டித்துறையா?" என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் திரண்டு கலந்து கொண்டனர்.
காவல்துறையின் அத்துமீறலை வன்மையாக கண்டித்த பேச்சாளர்கள், ஜனநாயக ரீதியாக போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், மாநில காவல் துறையையும் வலியுறுத்தினர்.
ஆர்பாட்டத்தில் CITU மாவட்ட செயலாளர் R.மூர்த்தி, AIKS மாவட்ட செயலாளர் R.T.முருகன், AIAWU மாவட்ட செயலாளர் K.சுந்தரமூர்த்தி, AIDWA மாவட்ட செயலாளர் B.இலக்கியபாரதி, DYFI மாவட்ட தலைவர் S.பிரகாஷ், SFI மாவட்ட செயலாளர் M.ஜீவானந்தம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.