12/12/2020
*மேமன் பாயும் குதுபு நாயகமும்*
ஒருநாள் குதுபு நாயகம் அவர்கள் தம் ஆறாவது தலைமுறையில் தோன்றிய செய்யித் யூசுப்தீன் என்பவரின் கனவில் தோன்றி சிந்து நாடு சென்று இஸ்லாத்தை பரப்புமாறு ஆணையிட்டதற்கேற்ப அவர்கள் *பகுதாதிலிருந்து* கி.பி 1422 ஆம் ஆண்டில் சிந்து (இந்தியா) நாடு வந்து சேர்ந்தனர்.அந்த நாட்டின் அரசரான ஜாம்ராய்தன் செய்யது யூசுப்தீனின் ஆன்மீகச்சுடரால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு மார்க்கப் கான் என்று பெயரிடப்பட்டது.
அவர்களின் கைபிடித்து முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஷத்திரியர்களின் ஒரு பிரிவினரான லொஹனாக்கள் என்று கூறப்படுகிறது.
ஏறத்தாழ பத்தாண்டு காலத்தில் 700 லொஹனா குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவின. அக் குடும்பத்தினரை மற்ற இந்துக்களிலிருந்து பிரித்து காண்பதற்காக மூஃமின் (இறைநம்பிக்கையாளர்கள்) என்று ஸெய்யிது யூசுப்தீன் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் மேமன் என திரியலாயிற்று.
மேமன் என்பதற்கு பாக்கியம் பெற்றவர்கள் என்ற கருத்து உள்ளதென்றும் குர்ஆனில் 90:18 இல் குறிப்பிடப்படும் மைமனா என்ற பதத்திலிருந்து வந்ததென்றும் சொல்லப்படுகிறது.
இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் சொல்லொணா துன்பம் விளைவித்ததனால் இவர்கள் சிந்திலிருந்து வெளியேறி கட்ச்,கத்தியவார்,குஜராத் ஆகிய பகுதிகளில் குடியேறினர் அங்கு வாழ்ந்து வந்த மக்கள் இவர்களை மரியாதையுடன் மேமன் சேத் என்று அழைக்கலாயினர். சிந்துப் பகுதியில் தங்கி விட்டவர்கள் சிந்தி மேமன் என்றும் கட்ச் பகுதியில் குடியேறியவர்கள் கட்சி மேமன் என்றும் கத்தியவார் பகுதிகளில் குடியேறியவர்கள் ஹலாய் மேமன் என்றும் அழைக்கப்பெறுகின்றனர்.
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் பக்தி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றால் தங்களின் குருநாதரின் குருநாதரான குதுபு நாயகம் அன்னவர்களின் அடக்கவிடத்தை கண்டுவர பகுதாதுக்கும் சென்று வருகின்றனர். வணிகத் துறையில் சிறந்து விளங்கும் இவர்கள் அறம் செய்வதிலும் சிறந்து விளங்குகின்றனர் தங்கள் வணிகத் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணம் குதுபு நாயகம் அன்னவர்களின் துஆ வே என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
ஆதம் என்பவரை ஹஜ்ரத் ஸையிது யூசுப்தீன் தங்களின் கலீஃபாவாக நியமித்ததற்கு இணங்க அவரின் வழித்தோன்றல்களே இதுகாறும் இவர்களின் தலைவர்களாக இருந்து வருகின்றனர். இந்தியாவில் இவர்கள் கட்ச்,கத்தியவார், குஜராத், பம்பாய் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் பாகிஸ்தானிலும் இவர்கள் பெருவாரியாக குடியேறியுள்ளனர்.
உலகின் எல்லா நாடுகளிலும் சென்று இவர்கள் வாணிபம் செய்து வருகின்றனர் இவர்களின் தாய்மொழி கச்சியாகும் அதைத்தவிர குஜராத் மொழியிலும் இவர்களுக்கு பேசத் தெரியும் இளமையிலேயே இவர்கள் உருது அரபி பார்ஸி ஆகிய மொழிகளையும் கட்டாயமாக கற்றுக் கொள்கின்றார்கள்
தகவல்- இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (அப்துற் றஹீம்)