28/05/2026
எம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட “அரசினால் கைவிடப்பட்டு, தனியார்த் தோட்டங்களில் முடக்கப்பட்டவர்கள்: இலங்கையின் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்” (“Abandoned by the State, Trapped in Private Estates: Rights Abuses Against Sri Lanka’s Malaiyaha Tamil Tea Workers”) என்ற அறிக்கை, மலையகத்தமிழ் தொழிலாளர்களின் நிலைமை குறித்து அண்மைக்காலத்தில் வெளிவந்த மிக முக்கியமான மனித உரிமை மற்றும் தொழிலாளர் சார்ந்த ஆய்வுகளில் ஒன்றாகும்.
இந்த அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள், சட்டத்தரணிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் இணைந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இதன்போது, தனியார்த் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில், குறிப்பாக தென்மாகாணத்தில் வாழும் மலையகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உழைப்புச் சுரண்டல், வன்முறைகள், வீட்டுப் பாதுகாப்பு இன்மை, நடமாட்டக் கட்டுப்பாடுகள், சமூகப் பாதுகாப்பு மறுப்பு, பெண்களின் பாதிக்கப்படக்கூடிய நிலை மற்றும் பரந்த சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல முக்கியமான மற்றும் வேதனைக்குரிய யதார்த்தங்கள் விவாதிக்கப்பட்டன.
பல தசாப்தங்களாகப் பெருமளவில் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த மலையகத் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினரின் பக்கம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததற்காக எம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் அதன் ஆராய்ச்சியாளர்களும் எனது பாராட்டுக்கள்.
எனினும், பெரும்பாலான விவாதங்கள் முதலாளிமார்களின் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொழிலாளர்களின் அவலங்கள் குறித்தே கவனம் செலுத்திய வேளையில், அவசர தேசியக் கவனத்தைப் பெற வேண்டிய ஒரு ஆழமான பிரச்சினை உள்ளதாக நான் நம்புகிறேன்.
இலங்கையின் தொழிலாளர்சட்டக் கட்டமைப்பு துண்டு துண்டாக, காலாவதியானதாக மற்றும் தனியார்த் தோட்ட மற்றும் சிறு தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்தங்களை கையாள்வதற்கு கட்டமைப்பு ரீதியாகப் போதிய சட்ட ஏற்பாடுகள் அற்றவையாக காணப்படுகிறது.
இதுதான் நாம் பேச மறுக்கும் உண்மையான பிரச்சினை ஆங்கிலத்தில் The elephant in the room என கூறுவார்கள்.
இங்குள்ள பிரச்சினை வெறுமனே துஷ்பிரயோகம் செய்யும் முதலாளிமார்கள் இருப்பது மட்டுமல்ல. இலங்கையில் பின்வரும் விடயங்களைச் சரியாகக் கையாள்வதற்கான ஒரு நவீன ஒருங்கிணைந்த தொழில் சட்டம் (Consolidated Employment Act) இன்னும் உருவாக்கப்படாமைதான் ஆழமான பிரச்சினையாகும்:
• கட்டாய உழைப்புக்கான அறிகுறிகள் (Forced labour indicators)
• கடன் அடிமைத்தனம் (Debt bo***ge)
• முதலாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தங்குமிடங்கள்
• தற்காலிக/நாளாந்த தொழிலாளர் சுரண்டல்
• தொழிலாளர் சார்ந்த வன்முறைகள்
• தொழில்சார் பாதுகாப்பு
• சமூகப் பாதுகாப்பு விடுபடல் (Social security exclusion)
• மற்றும் விரைவான சட்ட அமலாக்க வழிமுறைகள்
கண்டி மாவட்டத்தில் எனக்குள்ள கள அனுபவங்களின்படி, இந்த யதார்த்தங்கள் எனக்குப் புதியவை அல்ல. தென் மாகாணத்திற்கு வெளியேயும் கூட, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு அந்தஸ்து, சமூகப் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால கண்ணியம் போன்றவற்றில் தொழிலாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொள்ளும் ஏராளமான தனியார்த் தோட்டங்களும் சிறு தோட்டங்களும் உள்ளன.
நான் நேரில் கண்ட பல சூழ்நிலைகளில், தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் வரை மட்டுமே அவர்கள் தோட்டக் குடியிருப்புகளில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். வேலை முடிவுக்கு வந்தவுடன், அவர்களின் வீட்டுப் பாதுகாப்பற்ற நிலை உடனடியாக ஆரம்பமாகிவிடுகிறது. இது ஒரு ஆபத்தான சார்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சுழற்சியை உருவாக்குகிறது, இதை நாம் புறக்கணிக்க முடியாது.
அதே நேரத்தில், இப் பிரச்சினை வெறும் அரசியல் கோஷங்களை விடவும் மிகவும் சிக்கலானது. இந்த நிலங்கள் பல தனிநாருக்குச் சொந்தமான வணிகத் தோட்டங்களாகும். நடைமுறை ரீதியாகப் பார்த்தால், முறையான இழப்பீடு அல்லது அரசாங்கத்தின் ஆதரவுடனான கொள்கை வழிமுறைகள் இன்றி, தங்களால் நிலங்களை நிரந்தரமாக மாற்றிக் கொடுக்கவோ அல்லது தானமாக வழங்கவோ முடியாது என்று தனியார் நில உரிமையாளர்கள் வாதிடுகின்றனர்.
இதன் காரணமாகவே, தொழிலாளர் கண்ணியம், வீட்டுப் பாதுகாப்பு, தனியார் சொத்துரிமை மற்றும் நீண்ட கால சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான தேசிய பெருந்தோட்ட வீட்டுவசதி மற்றும் தொழிலாளர் கொள்கைக் கட்டமைப்பு இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.
பல தொழிலாளர்கள் பல வருடங்களாக "தற்காலிக" தொழிலாளர்களாகவே வகைப்படுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் முதலாளிமார்கள் அவர்களுக்குரிய EPF, ETF, மகப்பேறு நன்மைகள், ஓய்வூதியம், விடுப்பு உரிமைகள் மற்றும் நீண்ட கால தொழிலாளர் பாதுகாப்புகளை மறுக்க முடிகிறது.
அதே நேரத்தில், தொழில் திணைக்களம் பலவீனமான ஆய்வுத் திறன், தாமதங்கள், ஆள் பற்றாக்குறை, களமட்ட அமலாக்க அதிகாரக் குறைபாடு மற்றும் வலுவான விரைவான-செயற்பாட்டு வழிமுறைகள் இல்லாமை உள்ளிட்ட கடுமையான அமலாக்க சவால்களை எதிர்கொள்கிறது.
இதனால்தான் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தம் அவசியமாகிறது.
முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் பதவிக் காலத்தில், இலங்கையின் துண்டு துண்டான தொழிலாளர் கட்டமைப்பை நவீனமயமாக்கி, மிகவும் விரிவான ஒரு வேலைவாய்ப்புச் சட்டமாக குறியீட்டு வடிவிற்கு (codify) கொண்டு வருவதற்கான விவாதங்கள் தொடங்கப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்களில் நானும் பங்கெடுத்திருந்தேன். நாம் அதனை இறுதி செய்யும் தருவாய் வரை கொண்டு வந்தோம்
துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் இந்த செயல்முறையை நிறைவு செய்வதில் எந்தவொரு தெளிவான எத்தணிப்பும் காட்டப்படவில்லை.
இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்படுபவை:
• ஒரு நவீன ஒருங்கிணைந்த தொழில் சட்டம்
• வலுவான தொழிலாளர் ஆய்வு அதிகாரங்கள்
• கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு எதிரான குற்றவியல் பரிந்துரை வழிமுறைகள்.
• பெண் தொழிலாளர்களுக்கு வலுவான பாதுகாப்பு
• தொழிலாளர் வகையைப் பொருட்படுத்தாமல் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு
• தனியார்த் தோட்ட சமூகங்களுக்கான யதார்த்தமான தேசிய தோட்ட வீட்டுவசதி கொள்கை
வன்முறை, அச்சுறுத்தல், கட்டாய உழைப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் சுரண்டல் போன்ற கடுமையான தொழிலாளர் சுரண்டல்களை மெதுவான நிர்வாக செயல்முறைகளுக்குள் மட்டும் முடக்கி வைக்க முடியாது. தெளிவான துஷ்பிரயோகங்கள் காணப்படும் இடங்களில், தொழிலாளர் திணைக்களம், பொலிஸ், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அதிகார சபைகள் மற்றும் குற்றவியல் நீதி நிறுவனங்களுக்கு இடையே உடனடி ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
இந்த விவாதத்தில் தென் மாகாணமும் அரசியல் ரீதியாகக் கண்ணுக்குத் தெரியாத ஒன்றாக இருக்க முடியாது.
இன்று, தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக ஒரு இந்திய வம்சாவளித் தமிழ் அமைச்சரான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பதவியில் உள்ளார்.
எனவே, பின்வரும் நியாயமான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது:
• தனியார்த் தோட்டங்களில் உள்ள பெண் தொழிலாளர்கள் தொடர்பாக என்ன உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
• தெற்கில் உள்ள மலையகத் தமிழ் சமூகங்களைப் பாதிக்கும் தொழிலாளர் சுரண்டல் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன?
• இந்த விவகாரம் அமைச்சரவை அல்லது நாடாளுமன்ற மட்டத்தில் எத்தனை முறை எழுப்பப்பட்டுள்ளது?
இவை தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல. இவை ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் பிரதிநிதித்துவம் குறித்த நியாயமான கேள்விகள்.
எமது தலைவர் Mano Ganesan அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, 'இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் சமூகத்தை வெறும் ஒரு "தொழிலாளர் சமூகமாக" மட்டும் பார்க்க முடியாது. நாம் அரசியல் அபிலாஷைகள், கலாசார அடையாளம், அறிவுசார் பங்களிப்புகள், பொருளாதார லட்சியங்கள் மற்றும் சமத்துவக் குடியுரிமை உரிமைகளைக் கொண்ட ஒரு கண்ணியமான தேசிய இன சமூகமாகும்.'
எனவே, இந்த அறிக்கை வெறும் அவலங்களை ஆவணப்படுத்தும் ஒன்றாக மட்டும் நின்றுவிடாமல், தீவிரமான தொழிலாளர் சீர்திருத்தம், வீட்டுவசதி சீர்திருத்தம் மற்றும் தேசிய அங்கீகாரத்தை நோக்கிய ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும்.
எம்னஸ்டி அறிக்கை இலங்கைக்கான சான்றுகளை வழங்கியுள்ளது.
இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அமைப்பையே சீர்திருத்துவதற்கான அரசியல் துணிச்சல் இந்த நாட்டிற்கு இருக்கிறதா என்பதுதான்.
Anura Kumara Dissanayake Harini Amarasuriya Saroja Savithri Paulraj Amnesty International South Asia United Nations