01/04/2026
அன்பு பெற்றோர்களுக்கான மடல்…
நேற்று வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெறும் புள்ளிகளை மட்டும் தரவில்லை அதனுடன் சேர்த்து நிம்மதி, பெருமை, அதிர்ச்சி, அவமானம் மற்றும் அமைதி எனப் பல உணர்ச்சிகளை வீடுகளுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இன்னும் அதன் அதிர்வலைகள் குறைந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.
பல வீடுகளில் இன்று ஒரு மௌனமான துக்கம் பெற்றோர்களின் மத்தியில் நிலவுகிறது. அது பிள்ளை தோற்றுவிட்டான் என்பதை தாண்டி , தங்களின் எதிர்பார்ப்புகள் தோற்றுவிட்டதே என்ற ஏமாற்றத்தினால் ஆகும்.
கடந்த இரண்டு வருடங்களாக, இந்தப் பயணத்தைப் பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு கூட்டுப் பணியாகவே சுமந்தீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நிதி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பல தியாகங்கள்... தூக்கமில்லாத இரவுகள், அதிகாலை வகுப்புகள், வேண்டுதல்கள் என அனைத்தும் அந்த முடிவுகளில் அடங்கியிருந்தது. அதனால்தான், எதிர்பார்த்த முடிவு கிடைக்காதபோது, அது வெறும் மதிப்பெண் இழப்பாகத் தெரியாமல், உங்கள் உழைப்பிற்கும் நம்பிக்கைக்குமே ஏற்பட்ட இழப்பாகத் தோன்றுகிறது. This is real, and your pain is valid.
ஆனால் இங்கே ஒரு கசப்பான உண்மை இருக்கிறது .ஒரு பிள்ளையின் மதிப்பை ஒரு தேர்வு முடிவுடன் பிணைப்பது ஒரு பெரிய Psychological Trap என்று நான் சொல்லுவேன்.
உங்கள் பிள்ளை இப்போது குறைந்த மதிப்பெண்ணை மட்டும் எதிர்கொள்ளவில்லை; தனது அடையாளத்தையே இழந்து நிற்கிறான். இந்தத் தருணத்தில் அவர்களின் மூளை தர்க்கரீதியாகச் சிந்திக்காது . அச்சம், அவமானம், சுயசந்தேகம் போன்ற உணர்ச்சிகளில்தான் ஊசலாடும். இந்த நேரத்தில் நீங்கள் அவர்களைக் கண்டிப்பதோ அல்லது மற்றவர்களுடன் ஒப்பிடுவதோ அவர்களைத் திருத்தாது மாறாக, அது ஒரு மனக்காயத்தை உருவாக்கும். இப்படியான நிலையில் சிலரை சந்தித்தும் இருக்கிறேன் என்றபடியால் தான் கூறுகிறேன்."நான் வெற்றி பெற்றால் மட்டுமே எனக்கு மதிப்பு" என்கிற தவறான பாடத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடாதீர்கள்.பின்னையை வாழ்கையில் நிறைய சவால்களை கொண்டும் வரும்.
இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?
இந்த நெருக்கடி நேரத்தில் உங்கள் வேலை - முடிவுகளைச் சரி செய்வது அல்ல மாறாக பிள்ளையின் மனநிலையைச் சீர் செய்வது. சொல்லும்போது சில பெற்றோர்களுக்கு என்மீது கோவம் வரலாம்.
ஆனால் அறிவுரை சொல்வதற்கு முன், அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் குறுக்கீடு செய்யாமல் கேளுங்கள். A regulated parent creates a regulated child. நீங்கள் பதற்றமாகவோ கோபமாகவோ இருந்தால், அதை அவர்களிடம் காட்டாதீர்கள். அவர்கள் எதைச் சொன்னீர்கள் என்பதை மறக்கலாம், ஆனால் அந்தத் தோல்வியின் போது அவர்களை எப்படி நடத்தினீர்கள் என்பதை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.
இந்த முடிவு ஒரு முற்றுப்புள்ளி அல்ல, இது ஒரு பின்னூட்டம் என்பதைப் புரிய வையுங்கள். மனித மூளைக்கு எதையும் மாற்றியமைக்கும் ஆற்றல் உண்டு இது உண்மை.பொய்களைச் சொல்லி அவர்களைத் தேற்ற வேண்டாம் நிச்சயமாகச் சில கதவுகள் அடைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் பல புதிய வாசல்கள் திறந்தே இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
அதற்கு மேலதிகமாக அடுத்த வீட்டுப் பிள்ளையுடன் / அவர்களுடன் படித்தவர்களுடன் ஒப்பிடுவது தாழ்வு மனப்பான்மையைத்தான் வளர்க்கும். அதற்குப் பதிலாக, "எங்கே தவறு நடந்தது?" என்பதை நிதானமாக ஆராயுங்கள். அது படிக்கும் முறையா, மன அழுத்தமா அல்லது அந்தப் பாடத்திட்டம் அவர்களுக்குப் பொருத்தமில்லையா? இதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் அதே பாதையில் தள்ளுவது தீர்வாகாது.
சில பிள்ளைகள் சோம்பேறித்தனத்தால் தோற்பதில்லை; அவர்கள் மிகையான அழுத்தம் மற்றும் பயத்தினால் நிலைகுலைந்து போகிறார்கள். ஒவ்வொரு மூளையும் ஒரே மாதிரியான கல்வி முறையில் ஜொலிப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது என்ன செய்ய வேண்டும்?
• உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திவிட்டு, ஒரு பாதுகாப்பான சூழலை வீட்டில் உருவாக்குங்கள்.
• அவர்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிடாமல் அங்கீகரியுங்கள்.
• அனைத்து வாய்ப்புகளையும் (Re-sit, தொழில்முறை கல்வி, Skills) ஆராயுங்கள்.
• தேவைப்பட்டால், இப்போதே ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.
மதிப்பெண்கள் ஒருவரின் செயல்திறனை அளவிடலாமே தவிர, அவரின் ஆளுமையையோ, புத்திசாலித்தனத்தையோ அல்லது எதிர்கால வெற்றியையோ தீர்மானிக்க முடியாது.
Asna Sueetha Faizal