02/03/2025
அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கையுடன், அறம்சார் அரசியல் முழக்கத்துடன், சமூக நீதிக்கான அரசியல் போராட்ட செயற்களத்தில் கடந்த 13 வருடங்களாக வெல்ஃபேர் கட்சி அகில இந்திய அளவில் முனைப்புடன் இயங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய அரசியல் மாற்றங்களுக்காகத்தான் வெல்ஃபேர் கட்சி பாடுபட்டு வருகிறது. ஒற்றை வாக்கியத்தில் சொல்ல வேண்டுமெனில் சமூக நீதியுடனான மக்கள் நல அரசு உருவாக்கத்தை நோக்கித்தான் வெல்ஃபேர் கட்சி பீடு நடைபோடுகிறது. குற்றப் பின்னணி கொண்டவர்களின், கோடீஸ்வரக் கோமான்களின், கார்ப்பரேட் பெரு முதலாளித்துவ கொள்ளையர்களின் புகலிடமாக மாறியுள்ள சமகால அரசியல் களத்தை நல்லவர்களின், சாதாரண மக்களின் ஏக்கங்களை புரிந்து கொண்டவர்களின் அரசியல் களமாக மாற்றுவதற்கான பாதைதான் வெல்ஃபேர் கட்சி, கட்சியின் கடந்த காலச் செயல்பாடுகளை உற்று நோக்கினாலே போதும் அதன் செயல்பாடுகளை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். சொந்த நிலம் இல்லாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிலத்தை பெற்றுத் தந்துள்ளது. மக்கள் போராட்டங்களில் என்றும் முன்றின்று இயங்குகிறது. CAA எதிர்ப்புப் போராட்டங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும். விலைவாசி உயர்விற்கும் மதுவிற்கும் எதிரான போராட்டங்கள், ஒற்றை மொழி, கலாச்சாரம், தேசம் என்ற பாசிச சித்தாந்தத்திற்கும் இனவாதச் செயல்பாடுகளுக்கும் எதிராக அனைத்து ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பது என வெல்ஃபேர் கட்சியின் தலைவர்களும் செயல்வீரர்களும் என்றும் மக்களுடன் வீதிகளில் நிற்கின்றனர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரானச் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றிய பொழுது அவற்றை திரும்பப் பெறுச் செய்வதற்கானப் போராட்டங்களைத் தனியாகவும் பிற அரசியல் சமூக இயக்கங்களுடன் இணைந்தும் வெல்ஃபேர் கட்சி முனைப்புடன் முன்னெடுத்தது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தை வெல்ஃபேர் கட்சியின் மாணவ இளைஞர் இயக்கமான பிரட்டர்னிட்டி இயக்க தலைவர்கள்தான் டெல்லியில் துவங்கி வைத்தனர். ஆயிஷா ரெணாவும் அஃப்ரின் பாத்திமாகவும் அகில இந்திய அளவில் போராட்டத்தின் அடையாளங்களாக மாறினர். இன்றும் அவர்கள் களத்திலேயே உள்ளனர்.
என் ஐ ஏவால் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தாரின் குறை கேட்பு மக்கள் தீர்ப்பாயம் கோவையில் நடைபெற்றது. சிறைவாசிகளின் விடுதலைக்காக தொடர் சட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி காக்க சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி மாறிவ அளவிலும் அகில இந்திய அளவிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுத்து அதன் மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு வடிவம் கொடுத்துள்ளது வெல்ஃபேர் கட்சி.
நீதிபதி சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் சமூக கல்வி பொருளாதார வலிமைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை கைமேற்கொண்டு வருகிறது கட்சி.
தமிழ்நாட்டில் சனாதன பாசிச கருத்தை எதிர்கொள்ள பெரியாரிய கருத்தியலை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் பெரியாரியவாதிகளோடு இணைந்து செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது கட்சி.
பாலஸ்தீன மக்களுக்காக எப்போதும் களத்தில் துடிப்புடன் இயங்கி வருகின்றனர்.
நீதி சுதந்திரம் சமத்துவம் என்ற முழக்கத்துடன் எளிமையை அடையாளமாக்கி சேவையை போராட்டமாகக் கொண்டு களமாடி வருகின்றனர் கட்சியின் செயல்வீரர்கள். மக்களின் தேவைகளை அரசிடம் எடுத்துச் சொல்லி அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் செயலாற்றி வருகின்றனர்.
சகோதரரே.!
இணைவீர்!