03/08/2023
தீரன் சின்னமலை சாதித்த விடயத்தில் சாதி-மத வேறுபாடுகளைக் கடந்த ஆங்கிலேய எதிர்ப்புக் கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டது மிக முக்கியமானது. திப்பு சுல்தானுக்காக போர்க்களத்தில் தீரன் சின்னமலை வெள்ளையரை எதிர்கொண்டதென்பது பதவிக்கான போராட்டமல்ல. சகோதரத்துவமும், ஆதிக்க எதிர்ப்பும் திப்பு சுல்தானையும், தீரன் சின்னமலையையும் ஒன்றிணைத்தது. இந்து-முஸ்லீம் எனும் வேற்றுமைக்கு தீரன் சின்னமலையோ, திப்புவோ இடமளிக்கவில்லை. அருந்ததியர் சமூகத்தின் பொல்லானுடன், தீரன் சின்னமலையும் சாதி கடந்து கைகோர்த்ததற்கு இந்த அரசியலே காரணமானது. மருதுபாண்டியரும், விருப்பாச்சி கோபால்நாயக்கரும், புத்தேமுகம்மதுவும் கைகோர்த்த 225 ஆண்டுக்கு முற்பட்ட வரலாறு, இன்றைக்கு நமக்கு அத்தியாவசிய அரசியல் பாடத்தை கொடுக்கிறது.
தீரன் சின்னமலையை சாதிய அடையாளமாக்கி, ஆதிக்க அரசியல் செய்ய முயலும் சாதிவெறியர்களை பாஜக அரவணைக்கிறது. திப்பு-தீரன் தோழமையை மறைத்து வரலாறை இந்துத்துவ அரசியலுக்கு சாதகமாக மாற்றுவதை அம்பலப்படுத்தி வீழ்த்தும் பொறுப்பு நமக்குண்டு. சாதி கடந்து போரிட்ட தீரனை சாதிய அடையாளமாக்கினால், தீரனை அன்னியருக்குக் காட்டிக்கொடுத்த, அவரது சமூகத்தைச் சார்ந்த நல்லப்பனை எதற்கு அடையாளமாக்குவது? நல்லப்பனை சங்கிகளின் அரசியலுக்கு அடையாளமாக வைக்கலாம்.
கொங்கு மண்டலத்தை 'சங்கி' மண்டலமாக்கி விடலாம் என திட்டம்போடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தி சதித்திட்டத்தை எதிர்கொள்ள மே17 இயக்கம் 'திப்புவின் தோழன் தீரன் சின்னமலை'க்கு வீரவணக்கக் கூட்டத்தை ஈரோட்டில் ஆகஸ்டு-6ம் தேதி நடத்துகிறது. இப்பொதுக்கூட்டம் அரசியல் லாபத்திற்கு நடத்தப்படும் கூட்டமல்ல. தமிழின அரசியல் வெல்வதற்காக நடத்தப்படும் கூட்டம். இந்த சந்திப்பு நம் வலிமையை காட்டுவதற்காக அல்ல, நம் அரசியலை வலிமைப்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒன்றுகூடல். சாதி-மதம் கடந்த வீரர்கள் கூட்டத்தை உருவாக்கிய தீரன் சின்னமலையை தமிழர் ஒற்றுமைக்கான வரலாற்று சின்னமாக்குவோம். குடும்பத்துடன் பங்கேற்க அழைக்கிறோம்.