05/08/2026
த.வெ.க. அரசின் முதல் நிதிநிலை அறிக்கை
எதிர்கால நம்பிக்கையை விதைக்கும் தொலைநோக்குப் பட்ஜெட்!
சென்னை | ஆகஸ்ட் 5, 2026
2026–27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா (Paperless) தொலைநோக்கு பட்ஜெட்டாக தாக்கல் செய்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, பல்வேறு முக்கியமான மக்கள் நல அறிவிப்புகளை வெளியிட்டார். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பட்ஜெட் உரை மதியம் 12.30 மணியளவில் நிறைவடைந்தது.
🔹 முக்கிய அம்சங்கள்
₹1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு
2036ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புத்தாக்க நகரமான “அறிவகம்” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🎓 பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம்
பள்ளிக் கல்வித்துறைக்கு ₹44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி, மிதிவண்டி, ஹெல்மெட் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, “காமராஜர் காலை உணவுத் திட்டம்” 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
🏥 மக்கள் நல அறிவிப்புகள்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண உதவித் திட்டத்தில் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
🛣️ சாலை மற்றும் சமூக நலத்துறை
சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு ₹21,524 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறைக்கு ₹9,818 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🏆 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
இளைஞர்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் “வெற்றி திறன் பயிற்சி திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ₹1,051 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🚫 போதை இல்லா தமிழ்நாடு
“போதை இல்லா தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கி மறுவாழ்வு பணிகளுக்காக ₹70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகள் உருவாக்கப்படுவதுடன், பொதுமக்கள் ரகசியமாக தகவல் தெரிவிக்கும் வகையில் 10581 உதவி எண் மற்றும் “DrugsFreeTamilNadu” செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🏠 “வெற்றி வீடு” திட்டம்
“வெற்றி வீடு” திட்டத்தின் மூலம் கூரையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி, அனைவருக்கும் உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வீட்டு அலகுத் தொகை ₹3.10 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ₹3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
🏅 கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது
இந்த நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரில் விருது ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றுப் பெருமையையும், தமிழ்மொழி மீதான அவருடைய பற்றையும் போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
☪️ சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம்
சிறுபான்மையினர் நலனுக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான மானியம் ₹25,000-லிருந்து ₹35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ₹105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ₹34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு மொத்தம் ₹1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🌟 மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிடும் வகையில், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளையும், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், Ex. MP
தேசியத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...