23/02/2026
டர்ப் விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு கொடுக்கும் முடிவைத் திரும்பப் பெறாவிட்டால் கட்டணம் செலுத்தாமல் விளையாடும் போராட்டத்தை நடத்துவோம்!
கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் AIYF மனு!
கோவை மாவட்டம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட முத்தண்ணன் குளக் கரையில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் டர்ப் விளையாட்டு மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை நிர்வகிப்பதற்கு தனியாரிடம் ஒப்படைப்பதென கடந்த 11.02.2026 அன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற குழுத் தலைவர் தோழர் சாந்தி சந்திரன் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்.
கோவை மாவட்டம் வேகமாக நகரமயமாகி வருகிறது. தொழில், கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது. வெளி மாவட்டத்தினர், வெளி மாநிலத்தவர்கள் கோவையில் குடிபெயர்வது அதிகமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை பெருகுவதால் விளையாட்டு மைதானங்கள் குறைந்து வருகிறது. மேலும், ஏற்கனவே இருக்கும் மைதானங்களும் சுருக்கப்பட்டு வருகின்றன.
கோவையின் பிரதான மைதானங்களான சாஸ்திரி மைதானம், வ.உசி. மைதானம் போன்றவைகள் பொருட்காட்சி, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் இளைஞர்கள், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் தனியார் டர்ப் மைதானங்கள் பெருகி வருகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000க்கு மேல் பணம் கொடுத்துதான் விளையாட முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில், முத்தண்ணன்குளக் கரையில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள டர்ப் விளையாட்டு மைதானத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு, இளைஞர்களின் விளையாடும் வாய்ப்பை, ஆர்வத்தை பெருமளவில் குறைத்துவிடும். இம்முடிவு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப்பொருள், செல்போன் போன்றவற்றிற்கு அடிமையாகி, சீரழிந்து வரும் இளைஞர் சமுதாயத்தை மீட்பதற்கு "விளையாட்டு" மிகச்சிறந்த ஆயுதமாகும். விளையாட்டு வணிகப்பொருள் அல்ல; இது அனைவரின் உரிமை.
எனவே,
1. முத்தண்ணன் குளக்கரையில் டர்ப் மைதானத்தை தனியாருக்கு கொடுக்கும் கோவை மாநகராட்சியின் முடிவை திரும்பப் பெற வேண்டும். மாநகராட்சியே நிர்வகிக்க வேண்டும்.
2. மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் கட்டணமில்லா மைதானங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமாய் மாவட்ட ஆட்சியரிடத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் மனு அளித்தோம்.
மேலும், மாநகராட்சி நிர்வாகம் இம்முடிவை திரும்பப்பெறாவிட்டால், "டர்ப் மைதானத்தில் கட்டணம் செலுத்தாமல் விளையாடும் போராட்டத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ( ) அவசியம் நடத்தும்" என்பதையும் தெரிவித்தோம்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
All India Youth Federation
கோவை மாவட்டக்குழு
#கோவை #விளையாட்டு