21/05/2023
மதுரையில் எது விசேஷம்?
இந்த கேள்விக்கு பெரும்பாலோர் சொல்லும் பதில் சாப்பாடு. கறி தோசை. அயிரை மீன் குழம்பு. கோனார் மெஸ். சந்திரன் மெஸ், இடியாப்பம், ஜிகர்தண்டா என ரக ரகமான சாப்பாடும் சாப்பாடு சேர்ந்த இடங்களும். சிலர் அழகர், மீனாட்சி, தெப்பக்குளம் என கோயில் சார்ந்த இடங்களை சொல்வார்கள்.
ஆனால், மூன்று நாட்கள் இங்கே இருந்ததில் என்னை கேட்டால், "மதுரையின் விசேஷம் அதன் மக்கள் என்பேன்.
விமானத்தில் எதேச்சையாக சந்தித்த மதுரைக்கார பெண் நான் தனியாக செல்கிறேன், "ஓலா", "ஊபர்" தான் அழைக்க வேண்டும் என்று தெரிந்ததும் "அய்யோ அதெல்லாம் வேண்டாம் நான் உங்களை விட்டு செல்கிறேன்" என்றார். ஒரு Formalityக்காக சொல்கிறார் என்று நான் "இல்லை வேண்டாம் என மறுத்தாலும் கேட்காமல் தன ட்ரைவரை மதுரை சிட்டியின் இந்த மூலைக்கு வண்டியை விடச்சொல்லி என்னை விட்டு விட்டு, பிறகு தன் வீடிருக்கும் அந்த மூலைக்கு சென்றார்.
வழி தெரியாமல் பைக்கில் போகும் ஒருவரிடம் வழி கேட்டால், "அதோ அது அந்த ரோடு பொய் உள்ள இன்னொரு ரோட்டுக்குள்ள போகணும் " என சொல்லிவிட்டு பின் உடனே, "இருங்க நானே வந்து காமிக்கிறேன்" என்று தன் வண்டியை திருப்பி கொண்டு உள்ரோடு வரை கூடவே பயணித்து வழி காட்டிவிட்டு செல்கிறார்.
மீனாட்சி அம்மன் கோயில் வெளியே ஒரு குடிநீர் குழாயில் தண்ணீர் குடிக்க நின்றேன். எனக்கு முன்னே ஒரு வயதான தம்பதியினர் குடித்து கொண்டிருந்தனர். தோற்றத்தில் மிக வறியவர்களாக மிக எளிமையாக தெரிந்தனர். அந்த கணவர் தான் தண்ணீர் குடித்துவிட்டு, தன மனைவிக்கு பிடித்து கொடுத்துவிட்டு, பிறகு திரும்பவும் அந்த டம்ளர் நிறைய பிடித்தார். கடுமையான தாகம் போலிருக்கிறது என்று நான் மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே, சற்றும் எதிர்பாராமல் என் பக்கம் திரும்பி என்னிடம் அதை கொடுத்து விட்டு "குடி தாயி" என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார். அவருக்கு இருந்த மனக்கவலைகளில் நான் பக்கத்தில் நின்றிருந்ததை அவர் கவனித்தததே மிக பெரிய விஷயம். அதில் இத்தனை பரிவு வேறு!
இங்கே நான் குறிப்பிட்டது இந்த மூன்று மட்டுமே. இன்னும் பல சந்திப்புகள், விருந்தோம்பல்கலாய் என்னால் இங்கே எழுதமுடியவில்லை. ஒவ்வொன்றும் உளம் நெகிழ செய்கின்றன.
உண்மையில் மதுரை மக்கள் எல்லோரும் இப்படி தானா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் பார்த்த ஊர்களில், இரண்டே நாட்களில் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து இத்தனை பரிவை, அக்கறையை ஈரத்தை, இவ்வளவு குறுகிய காலத்தில் அடுக்கடுக்காக நான் வேறு எங்கேயும் எதிர்கொள்ளவில்லை.
என்னை பொறுத்தவரை மதுரையின் விசேஷம் அதன் மக்களே!!
Article by:
#மதுரை