28/11/2025
#வெண்மணி_நினைவு_தின_சாதி_சடங்கு_மறுப்பு_முற்போக்கு_இணையேற்பு_நிகழ்வு
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
வணக்கம். தமிழக வரலாற்றில் அழியா வடுவையும், உழைக்கும் மக்களின் நீதியையும், மாபெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திய கிராமத்தின் பெயர் கீழ்வெண்மணி. அங்கு விவசாய கூலிகளான தலித் மக்கள் பண்ணையார்களால் கொடூரமாக சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர். இதற்கு எதிராக அம்மக்கள் திராவிட இயக்கம் மற்றும் செங்கொடி இயக்கத்தின் கீழ் சங்கமாய் அணிதிரண்டனர். 1968 ம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைபடி நெல்லை கூலி உயர்வாகக் கேட்டு விவசாய கூலிகளான தலித் மக்கள் போராடினர். தன்னிடம் அடிமைகளாக இருந்த இந்த ஏழை தலித்துகள் தன்னை எதிர்த்து போராடியதையும் பொதுவுடைமைச் சங்கத்திலும் திராவிட இயக்கத்திலும் சங்கமாய் இணைந்து அவனை எதிர்த்து நின்றதையும் ஏற்க முடியாத பண்ணையார் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு மக்களின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஒடுக்கி வந்தான்.
ஆனால் பண்ணையடிமைகளாக இருந்த உழைக்கும் மக்களோ அன்றைய பொதுவுடைமை கட்சியிலும் திராவிட இயக்கத்திலும் தங்களை தீவிரமாக இணைத்துக் கொண்டு சுயமரியாதையோடும், நெஞ்சுறுதியோடும் சங்கமாய் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கூலி விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடுவோ, ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் கட்சி கூட்டத்திற்கு சென்றுவிட்டதை அறிந்து 1968 டிசம்பர் 25 அன்று தன் அடியாட்களை ஏவி கண்மூடித்தனமாக மக்களை தாக்கினான். தங்களை தற்காத்துக் கொள்ள அக்கிராமத்தின் கடைசி குடிசையான இராமையாவின் குடிசைக்குள் 19 குழந்தைகள், 20 பெண்கள், 5 வயதானவர்கள் என 44 பேர் தஞ்சம் புகுந்தனர். ஆனால் சாதிவெறியன் கோபாலகிருஷ்ண நாயுடுவோ 44 பேரையும் துள்ளத் துடிக்க உயிரோடு அந்தக் குடிசையில் எரித்துக் கொன்றான். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சாதிவெறியன் கோபால கிருஷ்ண நாயுடுவை "பணக்காரன் எப்படி தவறு செய்வான்" எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆனால் மாபெரும் கொடூரத்தை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த சாதிவெறியன் கோபாலகிருஷ்ண நாயுடுவை அன்றைய நக்சல்பாரி தோழர்கள் சரியாக 12 ஆண்டுகள் கழித்து 1980ல் அதே டிசம்பர் மாதத்தில் 14 ம் தேதி வெட்டிக்கொன்றனர். அவன் உடலில் 44 வெட்டுக்கள் இருந்தன. "கொடூரமாக கொல்லப்பட்ட 44 உயிர்களுக்கு இது தான் மக்கள்மன்றத்தின் நீதி" என்று தங்களின் துண்டறிக்கையை இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனின் பிணத்தின் அருகில் வீசி சென்றனர்.
ஆண்டுகள் பல கடந்த போதிலும் கூலி உயர்வுக்கான போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. மேற்கண்ட நிலைமைகள் தற்போதும் நவீன வடிவில் அதே தலித் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு நிகழ்ந்து வருவது அவலத்திற்குரியதாகும். தமிழகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் கூட அரசு அறிவித்த சம்பள உயர்வையே கூட அரசு வழங்குவதில்லை. நாம் வாழ்ந்துவரும் இருபதாம் நூற்றாண்டில் சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஏவுகணை அனுப்பும் அளவிற்கு வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சி இருந்தும் கூட கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க எந்த வகையிலும் அதை பயன்படுத்த ஆளும் வர்க்கம் நினைப்பதில்லை. சென்னையில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட வேலையை திரும்பத்தரக் கோரி கடந்த 100 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். தற்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் திமுக அரசோ அவர்களை குப்பைகளாக தூக்கி எறிந்து இராம்கி போன்ற கார்ப்பரேட்களுக்கு சேவை செய்கிறது.
தலித் மக்களை குலத்தொழில் முறையிலிருந்து மீட்பதற்காகத்தான் தூய்மைப்பணிகளை தனியாருக்கு அரசு தாரைவார்க்கிறது என்று சிலர் தனியார்மயத்தை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் உண்மையிலேயே அரசிற்கு சமூக அக்கறை இருந்தால் அரசின் வேறு துறைகளில் அம்மக்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்க வேண்டும். தூய்மைப்பணி முழுக்க இயந்திரமயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஒருபுறம் பாசிச-பாஜக அரசின் மோடி-ஷா கும்பல் தண்டகாரண்ய காடுகளில் உள்ள கனிமவளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க ஆப்ரேஷன் ககாரை நடத்திக்கொண்டுள்ளது. தன் தாயின் மார்பில் பால் அருந்திக்கொண்டிருந்த மங்லி என்ற 6 மாத பிஞ்சுக் குழந்தையை சுட்டுக் கொன்று விட்டு மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என கொக்கறிக்கிறது. சொந்த நாட்டு பழங்குடி மக்கள் மீது இராணுவமும் சிறப்புப் படைகளும் இரத்தவெறிபிடித்த போரை தொடுத்து வருகிறது. மறுபுறம் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு பரந்தூர் விமானநிலையத்திற்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழிக்க அனைத்து வேலைகளையும் துரிதமாக செய்து கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து வருடக் கணக்கில் போராடிவரும் பரந்தூர் விவசாய மக்களை காக்கி படைகளை ஏவி ஒடுக்கி வருகிறது. ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட தாராளமய-தனியார்மய-உலகமய கொள்கைகளே இது போன்ற நம் மக்கள் சந்திக்கும் அனைத்து இன்னல்களுக்கும் முதன்மை காரணமாக உள்ளது.
18 வயது நிரம்பியவர்கள் இந்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் பக்குவம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் காதலியை/ காதலரை திருமணம் செய்து கொள்வதென்பது இந்த சாதிய சமூகத்தில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. சாதிமறுப்பு, மதமறுப்பு திருமணம் செய்பவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்படுவதும், ஒரே சமூகமாக இருந்தாலும் வர்க்கம் கடந்து காதலிப்பவர்கள் கொடூரமாக கொல்லப்படுவதும் அன்றாட செய்திகளாகவே உள்ளன. இத்தகைய "ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்" என பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும் இன்றுவரை தமிழ்நாட்டின் சமூகநீதி அரசால் அச்சட்டம் இயற்றப்படவில்லை. இதற்காக ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டாலும் அது நம்பகத்தன்மையற்றதாகவே உள்ளது. ஏனெனில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவர்களின் சாதிவெறிக்கு எதிராக நீதிபதி சந்துரு தலையிலான ஆணையத்தின் அறிக்கை என இரண்டுமே தலைமை செயலகத்தில் தூங்கி கொண்டிருக்கின்றது. திமுக அரசு இவ்விரு ஆணையத்தின் பரிந்துரைகளையும் குப்பைகளாக தூக்கி எறிந்து விட்டது என்பதே நிதர்சனமாக உள்ளது.
ஆக நம் மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டிய இத்தகைய சூழலில் இன்றைய பார்ப்பனிய, சாதிய, நிலவுடைமைச் சமூகத்தில் கீழ்வெண்மணி தியாகிகளையும் அவர்களின் எஃகுறுதியுடனான வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பதும், சாதி சடங்கு மறுத்த முற்போக்கு இணையேற்புகளை முன்னின்று நடத்துவதும் இன்றியமையாதது. அதன் ஒரு பகுதியாக நடைபெறும் சாதி சடங்கு மறுப்பு முற்போக்கு இணையேற்பான இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள தோழமையோடு அழைக்கிறோம். சமத்துவ சமூகம் படைக்க சாதி ஒழிப்பை, ஆணாதிக்க ஒழிப்பை சாத்தியமாக்க, வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிக்க தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்புவோம். தாராளமய-தனியார்மய-உலகமய கொள்கைகளை எதிர்த்து நிற்போம்.
கீழ்வெண்மணி தியாகிகளுக்கு, சாதி ஒழிப்பு வர்க்க போராளிகளுக்கு செவ்வணக்கம்!
பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் உள்நாட்டுப் போரான ஆப்ரேஷன் ககாருக்கு எதிராக குரல் கொடுப்போம்!
சாதி ஒழிப்பை சாத்தியமாக்க வர்க்க போராட்டத்தை உயர்த்தி பிடிக்க கீழ்வெண்மணி நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் (AIM)
பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் (SUMS)
9047035824 / 9488718431 / 7200568403