06/03/2024
*இந்த ஆண்டு 11,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்காதது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.*
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 12 வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய 7.74 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு எழுத இருந்த நிலையில் 12 ம் வகுப்பு மொழிப் பாடத்தில் 12,364 மாணவர்களும் ஆங்கிலத்தில் 12,696 மாணவர்களும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காமல் (ஆப்செட்) என தேர்வுத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகின, அதேபோல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8. 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில் 11ம் வகுப்பு மொழிப் பாடத்தில் 9,844 மாணவர்கள் பொது தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு மொத்தமாக 8 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என அரசு தரப்பில் தேர்வு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டும் மாணவர்கள் ஆயிரம் கணக்கில் பங்கேற்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்குகிறது
பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் இடைநிற்றலை சரி செய்யவும் அதை கவனிக்கவும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டிலும் பெரும்பாலான மாணவர்கள் பொதுத் தேர்வு பங்கேற்காமல் ஆப்சன் என செய்தி வருவது பெரும் கண்டனத்திற்குரியது.
11ம் வகுப்பு தேர்வில் 4.31 லட்சத்திற்கும் அதிகமாக மாணவிகள் எழுத உள்ள நிலையில் மாணவிகளின் வருகை குறித்தும், பல மாணவர்கள் தேர்வில் பங்கேற்காத மாணவ மாணவிகள் விவரத்தையும் நகர் மற்றும் கிராமப்புற என புள்ளி விவரத்தோடு எந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் பின்தங்கியுள்ளனர் என்பதையும் கணக்கிட்டு தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும், உடனடியாக தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு சென்று காரணங்களை கண்டறிய வேண்டும், முழுமையான தரவுகளோடு அரசு தேர்வு வாரியம் மாணவர்கள் தேர்வு எழுதாத காரணங்களை தெளிவுபடுத்தி அறிவித்திட இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.
தௌ.சம்சீர் அகமது
மாநிலத் தலைவர்
கோ.அரவிந்தசாமி
மாநிலச் செயலாளர்