09/10/2024
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
மக்கள் நலன் காக்க மாநிலம் முழுவதும்
மருத்துவ முகாம்களை நடத்திய பாட்டாளி
சொந்தங்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்!
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று மருத்துவ முகாம்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து சரியான நேரத்தில் சேவை உள்ளத்துடன் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது பாராட்டத்தக்கதாகும்.
மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் கல்விக்கு அடுத்து மிகவும் முக்கியமானது மருத்துவம் ஆகும். நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம் ஆகும். வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் நோக்குடன் அமைப்புரீதியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்று, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மருத்துவ முகாம்களில் பங்கேற்ற மக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா? என்பது கண்டறியப்பட்டு, அதற்கான மருத்துவம் வழங்கப்பட்டதுடன், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. உயர்மருத்துவம் தேவைப்படும் மக்களுக்கு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளை உணர்ந்து இலவச மருத்துவ முகாம்களை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.