05/09/2026
🔵⚪🔵2091-வது நாளின் காலைத்தியானம் 06/09/2026 !!!
இந்த ஓய்வநாளின் காலைவேளையில், "மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்" ...... "I WILL BUILD YOU UP AGAIN, AND YOU… WILL BE REBUILT" என்று (JEREMIAH) எரேமியா 31:4-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
இந்த உலகவாழ்வில் ஒரு சிலர், தங்களது குடும்பம், தொழில், வேலை, ஆவிக்குரிய ஜீவியம் என அனைத்திலும், ஒரு உயர்வான நிலையில் இருந்து, ஏதோ ஒரு வீழ்ச்சியை இன்று சந்தித்து, வாழ்க்கையே உடைந்து, நொறுங்கிப் போய் ஒரு கடினமான பாதையில் சென்று கொண்டிருக்கக்கூடும்.
நம் தேவனாகிய கர்த்தர், ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ‘மறுபடியும் கட்டி எழுப்புவேன், நீ கட்டப்படுவாய்’ என்று வாக்குக்கொடுக்கிறார்.
ரூத்தினுடைய வாழ்க்கையின் முதல் பகுதியிலே மிகப்பெரிய வீழ்ச்சி காணப்பட்டாலும், கர்த்தர் மீண்டும் அவளுடைய வாழ்க்கையைக் கட்டி எழுப்பினார். மிகுந்த ஆஸ்திக்காரனாகிய போவாஸை வாழ்க்கைத் துணையாய்த் தந்தருளினார். ரூத்தின் வம்சத்தில் தாவீதும், அதைத் தொடர்ந்து நம் அருமை இயேசு கிறிஸ்துவும் பிறந்ததாகப் பார்க்கிறோம்.
ஆமோஸ் 9:12-ல் “…. விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்” என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.
எனவே பிரியமானவர்களே,
இடிந்து போயிருக்கிற நம் வாழ்வை கர்த்தர் கரத்திலே ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் திரும்பவும் சிறப்பாய்க் கட்டியெழுப்பி, மேன்மையான வாழ்வைத் தந்து நம்மை கனப்படுத்துவார்.
ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, எங்களை மறுபடியும் நீர் கட்டுவீர் என்றும், நாங்கள் கட்டப்பட்டு நிலைநிற்போம் என்றும் விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே. ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.