15/01/2026
பாமக நிறுவனர், தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் தமிழர் திருநாளாம், பொங்கல் வாழ்த்து செய்தி!💙💛❤️
பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாசு தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து செய்தி
தமிழர்கள் கொண்டாடும் தமிழ்ப் பொங்கல் திருநாள், உலகத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றட்டும்
பண்டைய தமிழரின் பண்பாட்டுத் திருவிழாவாம், பாரம்பரியம் போற்றும் மங்கலப் பெருவிழாவாம், தன்னிகரில்லா தனிப்பெரும் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்துணர்ச்சியோடு கொண்டாடும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
"யாமறிந்த மொழிதனிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றான் பாரதி. அந்த பாரதியின் கூற்றுக்கேற்ப தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற போற்றுதலுக்குரிய முதுமொழிக்கு ஏற்ப "போக்கி பண்டிகையில் " கடந்த காலங்களில் நம்மில் ஏற்பட்ட எதிர்மறை சிந்தனைகள், எதிர்மறையான நிகழ்வுகள் அகல வேண்டி மாவிலை, வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ இப்படி இலைகளாலும் பூக்களாலும் வாயில் தோரணம் கட்டி மக்களையும்; வயல்வெளியில் காப்பு சூடி மண்ணையும் காக்கின்ற மாண்புடை சிறந்த மார்கழியின் இறுதி நாள்.
தமிழர் போற்றும் தை முதல் நாளை ""தை பிறந்தால் வழி பிறக்கும்'" என்று பண்டைய தமிழர்கள் பறைசாற்றுவது எல்லோர் இல்லங்களிலும் இருளகன்று ஒளி பிறக்கும், புதிய விடியல் புது வாழ்வளிக்கும் என்பதற்கே... அந்நாளிலிருந்து புத்துணர்ச்சியோடு, புதிய சிந்தனையோடு, மாவிலையுடன் பச்சை மஞ்சளும் தித்திக்கும் செங்கரும்பும் வாயிலில் தோரணமாய் வளைத்துக் கட்டி, புத்தாடைகள் அணிந்து, புதுப் பானையில் புத்தரிசியிட்டு, இனிக்கும் வெல்லமதை இதமாய் சேர்த்து, பால் பொங்கி வருகையில் குடும்பமே குதூகலமாய் "பொங்கலோ பொங்கலெ"ன பூரித்து மகிழ்ந்து, கொண்டாடும் பொன்நாள்.
மூன்றாம் நாளோ; பொங்கல் திருநாளின் முத்தான முக்கியமான நாள்; உழவு செழிக்க, உணவு பெருக்க ஒவ்வொரு நாளும் உழைத்திடும் கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் நற்றமிழ் விழா... மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, வண்ணங்கள் பூசி, இலைகளாலும் மலர்களாலும் மாலைகள் அணிவித்து, வெண்பொங்கலுடன் வெள்ளமும் பழமும் கீரையும் படையிலிட்டு, உருண்டையாய் உருட்டி மாடுகளின் வாயில் உணவாய் அளித்து உவகை கொள்ளும் உன்னத திருநாள் நான்காம் நாளோ காணும் பொங்கல்;குடும்பத்தில், உறவில் மூத்தவர்களானவர்களின் ஆசிகளைப் பெற்று, உறவினர்கள் நண்பர்களிடம் வாழ்த்துகளை பகிர்ந்து, மகிந்து உறவை போற்றும் உற்சாகப் பெருநாள்
பிறந்த ஊரில் இருந்தாலும், பிரிந்து வேறோர் ஊரில் இருந்தாலும், அண்டை மாநிலத்தில் இருந்தாலும், அயலக நாடுகளில் இருந்தாலும் தமிழர்களின் பொங்கல் திருநாள் ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ளத்திலும், ஒரு வார காலம் உற்சாகம் பொங்கி வழியும், உணர்ச்சிகள் ததும்பி வழியும்.
சாதி மதம் கடந்து, ஊர் நாடு எல்லை கடந்து உலகத் தமிழர்கள் ஓரணியில் திரண்டு உற்சாகமாய் கொண்டாடும் இந்த ஒற்றுமை பெருவிழா, பானையில் பொங்கல் பொங்குவதைப் போல தமிழர்கள் வாழ்வில் வளங்களும் நலங்களும் பொங்கட்டும், கரும்பும் சர்க்கரை பொங்கலும் தரும் இனிப்பைப் போல, தமிழர்கள் வாழ்வும் இனிக்கட்டும். அன்பும், ஆனந்தமும் பெருகட்டும், பொங்கலோ பொங்கலென என் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.