05/06/2026
நன்மை செய்யாவிடில் .....
இன்றைய வேதாகமப் பகுதி
ஏசாயா-1:10-20
மத்தேயு - 25:31-46
நன்மை செய்யப் படியுங்கள்...
ஏசாயா - 1 : 17
ஏராளமான கிறிஸ்தவ மக்கள், தேவனால் பயன் பெற வேண்டும், வளமடையவேண்டும், வசதி நிலை பெறவேண்டும் என்று தான் அதிகமாக விரும்புகின்றார்கள். இவைகளை அடைவது தொடர்பாகவே விசுவாசமும், பக்தி சம்பந்தமான செயல்களும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிறருக்குத் தாங்கள் நிழல்தரும் மரங்களாகவும், கனிதரும் செடிகளாகவும் விளங்கவேண்டிய தேவையைக் குறித்தோ போதிய அளவு சிந்திப்பதில்லை. ஆனால் பரிசுத்தத்தின் முக்கியமான ஒரு பிரதிபலிப்பு பிறருக்கு நன்மை செய்தலாகும்.
ஏசாயா தீர்க்கனின் காலம். ஜனங்கள் தங்கள் வழக்கத்தின்படியே இறை வழிபாடுகளில் தீவிரமாயிருந்தார்கள். பலியிடுதல், ஓய்வு நாள் ஆசரிப்பு, பண்டிகை கொண்டாட்டம், காணிக்கை கொடுத்தல், ஜெபம் என வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்கள் குறைவின்றி நடந்தன. ஆனால் தேவன் அவைகளைப் பார்த்து வெறுப்படைந்து, இவைகளெல்லாம் தமக்குத் தேவையில்லை என்று கூறினார். இந்த வழிபாட்டு சம்பந்தமான விஷயங்கள் அவருக்கு அரோசிகமாகவும், அருவருப்பாகவும் இருந்தன.
அதற்குப் பதிலாக அவர்களைப் பார்த்து நன்மை செய்ய படியுங்கள் என்றார். ஆம். அவர்கள் வழிபாட்டு விஷயங்களில் நன்கு பழகியிருந்தார்கள். ஆனால் நன்மை செய்யவோ பழகவில்லை. இன்று நம்முடைய நிலை என்ன? நாம் சபை கூடுதல், ஆராதித்தல், காணிக்கை கொடுத்தல், ஜெபம் செய்தல், துதிஸ்தோத்திரம் ஏறெடுத்தல், ஊழியம் எனப் பல ஆவிக்குரிய காரியங்களில் பழகியிருக்கின்றோம். ஆனால் நன்மை செய்யப் பழகியிருக்கின்றோமா? நன்மை செய்தல் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்திருக்கின்றோமா? பிறருக்கு நன்மை செய்வதை வாழ்க்கையின் முக்கியமான ஒரு அலுவலாகக் கொள்ளாதவர்கள், தேவனுடைய பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் என்பதை அறிந்திருக்கின்றோமா? (மத்-25:41-46)
இயேசு கிறிஸ்து மத சம்பந்தமான காரியங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தவரல்ல. அவர் நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்தார் என்று வேதம் சொல்கின்றது. ஏனென்றால் நன்மை செய்தல் என்பது தேவனைப் பிரியப்படுத்துகின்ற வாழ்க்கையின் முக்கியமான ஒரு அம்சம் ஆகும். நாம் கிறிஸ்துவின் ஆவியினால் நடத்தப்படுவது உண்மையாயின் நாம் பிறருக்கு நம்மாலியன்ற உதவிகளையும், உபகாரங்களையும் செய்வதற்கு அசதியாயிருக்க முடியாது. இன்று ஆண்டவர் நம்மைப் பார்த்து நன்மை செய்யப் படியுங்கள் என்று சொல்கிறார். நாம் எவ்வளவுதான் ஆராதித்து, காணிக்கை கொடுத்து ஊழியம் செய்து வாழ்ந்தாலும், ஆக்கப்பூர்வ நன்மைகளைப் பிறருக்குச் செய்யாவிடில் நம்முடைய பரிசுத்தம் அரைகுறையானதே.
நன்மை செய்யப் பழகுவோம்...
ஆமென் ....
**** **** **** **** **** *
இந்த வலைப்பக்கம் உங்களுக்குப்பிடித்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து...
பின் தொடரவும்... நன்றி
https://www.facebook.com/profile.php?id=61564058229268
06/06/2026