16/08/2026
தென்காசி மாவட்டத்தில் வக்ஃபு வாரிய அலுவலகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - SDPI மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்...!
தென்காசி, ஆகஸ்டு.16
தென்காசி தெற்குமாவட்ட SDPI கட்சியின் செயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் திவான்ஒலி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல்பாசித் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சீனா, சேனா.சர்தார்,மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் செய்யது அலி பாதுஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்நதீம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தெற்குமாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு மற்றும் துணை அமைப்புகளின் பலப்படுத்துதல், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்துதல் மற்றும் மக்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வது சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் - 1
தென்காசி மாவட்டத்தில் ஏராளமான வக்ஃபு நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் வக்ஃபு சொத்துக்கள் உள்ள நிலையில், அவற்றின் நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக திருநெல்வேலி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளை அணுக வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக உலமாக்கள், பள்ளிவாசல் பணியாளர்கள் ஆகியோர் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க திருநெல்வேலி வரை செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
எனவே, வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை தடுப்பது, ஆவணங்களை முறைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காணுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மாவட்ட அளவிலான அலுவலகத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், அலுவலகம் அமைப்பதற்கான இடம், பணியாளர்கள் மற்றும் தேவையான நிர்வாக கட்டமைப்பை அரசு உடனடியாக ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் -2
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை நடைபெற்று வரும் (Monday Petition) மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
எனவே பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை வெறும் பதிவுகளாகக் கருதாமல், ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சனைக்கும் பொறுப்பு அலுவலரை நியமித்து, தெளிவான காலக்கெடு நிர்ணயித்து தீர்வு காண வேண்டும்.
மேலும், தீர்வு காணப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட்டு, மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
தீர்மானம் - 3
சிலம்பு விரைவு ரயில் மற்றும் தாம்பரம்–செங்கோட்டை விரைவு ரயிலை தினசரி ரயில்களாக இயக்க வேண்டும்!
தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் நோயாளிகள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருவதற்கு ரயில் போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது.
தற்போது போதிய தினசரி ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சிலம்பு விரைவு ரயில் மற்றும் தாம்பரம்–செங்கோட்டை விரைவு ரயிலை வாராந்திர/குறிப்பிட்ட நாட்கள் சேவையிலிருந்து தினசரி சேவையாக மாற்றி இயக்க வேண்டும்.
மேலும், தென்காசி–செங்கோட்டை வழித்தடத்தில் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்கவும், ரயில் சேவைகளை விரிவுபடுத்தவும் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் - 4
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், பீடி சுற்றும் தொழிலை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, ஆலங்குளத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ESI மருத்துவமனை உடனடியாக அமைக்க வேண்டும்.
மேலும், பீடி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தரமான இலவச மருத்துவச் சேவையும், ESI திட்டத்தின் முழுமையான பயன்களும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.