02/06/2026
திருநெல்வேலி மாவட்டத்தில், 6 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதம் விதிப்பு.
கடந்த 2024-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சேவியர் என்ற பூம்பூம் சேவியர் (57) என்பவர் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. C.S. சாந்தி புலன் விசாரணை மேற்கொண்டு, எதிரியை கைது செய்தார்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி திரு. சுரேஷ் குமார் அவர்களால் இன்று (02.06.2026) குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50,000/- நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. M.சண்முகம் (CWC) அவர்கள், வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. C.S.சாந்தி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் திருமதி. மாலதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் திருமதி. உஷா அவர்களையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V. பிரசண்ண குமார்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 11 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.