19/01/2016
திருப்பூரின் புதிய போலீஸ் கமிஷனர். சவால்களை வெல்வாரா? பிரச்னைகளுக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக, மஞ்சுநாதா நேற்று பொறுப்பேற்றார். நகரில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னை, பெருகும் குற்றச்சம்பவங்கள், அரசியல் நெருக்கடிகளை தாண்டி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தள்ளது.
திருப்பூர் மாநகர முதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட செந்தாமரைக்கண்ணன், பல புதிய முயற்சிகளை மேற்கொண்டார். டூவீலர்களில் செல்வோர், "ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற உத்தரவு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த கணேசமூர்த்தி, சில நாட்களே பணியாற்றினார்.
கமிஷனரகம் ஐ.ஜி., அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, சேஷசாய் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற போது, "ஹெல்மெட்' விவகாரத்தில், மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. கோர்ட் உத்தரவையடுத்து, தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டார். எளிமையான அணுகுமுறையுடன் செயல்பட்டதோடு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், கவனமாக இருந்தார். அனைத்து தரப்பு அமைப்புகள் மற்றும் அரசு துறைகளுடன் இணக்கமாக செயல்பட்டதால், இவரது பதவி காலத்தில், பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னைக்கு மாற்றப்பட்டதால், வடக்கு மண்டல ஐ.ஜி., மஞ்சுநாதா திருப்பூருக்கு நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார். இவர், ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
பற்றாக்குறை போலீஸ்: திருப்பூர் மாநகர போலீஸில், 900 பேர் பணியாற்ற வேண்டும்; 600 பேரே உள்ளனர். போக்குவரத்து உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது பணியில் உள்ள இரு இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி., பதவிக்காக காத்திருக்கின்றனர். குற்றப்பிரிவை பொறுத்தவரை, குற்ற வழக்கு விசாரணை மற்றும் கண்டுபிடிப்பு பணி, சிறப்பு அணியில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை துரிதமாக கண்டறிய வேண்டும்.
புதிய பிரிவுகள் தேவை: குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், பல்வேறு முக்கிய பிரிவுகள் தேவையாக உள்ளன. மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, கைரேகை மற்றும் தடயவியல் பிரிவு, "சைபர் கிரைம்' உள்ளிட்டவை, திருப்பூரில் இல்லை.
மாநகர போலீஸ் துவங்கப்பட்டதும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான எந்த நடவடிக்கையும், இதுவரை எடுக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்களின் போன்களை கூட கண்டறிய முடியாத நிலையில், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
கண்காணிப்பு அறை: நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சிக்னல் பகுதி கேமராக்களின்
பதிவுகளை கண்காணிக்க, மாநகராட்சி சந்திப்பில், கண்காணிப்பு அறை அமைக்க திட்டமிடப்பட்டு, தீபாவளிக்கு முன் துவங்கப்பட்டது; இன்று வரை முடியாமல் கிடப்பில் உள்ளது.
வெளிநாட்டினர் பிரச்னை: சுற்றுலா மற்றும் மருத்துவ விசாவில் திருப்பூர் வரும் வெளிநாட்டினர் பலர், குறிப்பாக நைஜீரியர்கள், நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுகின்றனர். இவர்களில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக, புகார் உள்ளது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலானோர் வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டு, நகருக்குள் நடமாடுகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் உள்ள திருப்பூரில், 100க்கும் குறைவானவர்ளே, தங்களது விவரங்களை, போலீசில் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் இளைஞர் படை: போலீஸ் இளைஞர் படைக்கு, தினமும் எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படையில்
சேர்க்கப்பட்டனர். டிரைவர், தபால் பணி, நிலைய அலுவலக உதவி போன்ற பணிகளுக்கு அமர்த்தப்பட்ட இளைஞர் படையினர், பெரும்பாலும் இரவு பணி, ரோந்து பணி செய்கின்றனர். சிலர், 24 மணி நேரமும் பணியாற்றுவதாக புலம்புகின்றனர். பொதுமக்களுடன் இணக்கமாக பழகத்தெரியாமல், இவர்களில் சிலரது நடவடிக்கையால், ஆங்காங்கே சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
செயின் பறிப்பு: செயின் பறிப்பு தடுப்புக்குழு போலீசார், ரோந்து பணியில் இருந்தாலும், வழிப்பறி சம்பவங்கள், வாகன திருட்டுகள், இரவு மற்றும் பகல் நேரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடர்கின்றன. போலீஸ் போல் நடித்து, அப்பாவிகளிடம் நகை பறிப்பதும் தொடர்கிறது.
எல்லை பிரச்னை: திருப்பூர் மாநகராட்சி பகுதியை எல்லையாக கொண்டு, கமிஷனரகம் அமைக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லை, பூண்டி பேரூராட்சி வரை உள்ளது. அதை அவிநாசி போலீஸ் ஸ்டேஷனோடு இணைக்க வேண்டும் அல்லது, புது ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும். வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், எம்.எஸ்., நகரில் "அவுட் போஸ்ட்' அல்லது புது ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.
தொழிலாளர் விவரம்: தொழில் வளர்ச்சி காரணமாக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும், தினமும் ஏராளமானோர் திருப்பூர் வருகின்றனர். குற்றம் மற்றும் அசம்பாவிதம் ஏற்படும்போது, அவர்கள் குறித்த விவரம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டு, போலீசார் திணறுகின்றனர். இதை தவிர்க்க, அனைத்து குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவோர் குறித்த விவரங்களை பெறும் திட்டம் துவங்கப்பட்டது; இத்திட்டப்பணி, 20 சதவீதமே நடந்துள்ளது.
புது கமிஷனர் தீர்ப்பாரா? ஆளும்கட்சி மாநகராட்சி கவுன்சிலர் "காட்டன்' முத்து கொலை நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை எந்த துப்பும் இல்லை. இரவு நேர கடைகள் நடத்துவதில் உள்ள பிரச்னை; ஆளும்கட்சியினர் ஆசியுடன் நடக்கும் ரகசிய மது விற்பனை; கட்டப்பஞ்சாயத்து; கஞ்சா, திருட்டு "சிடி', லாட்டரி விற்பனை; தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம்; போலீசாருக்கு புத்துணர்வு அளிக்கும் முகாம்; பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்
பகுதிகளில் இரவில் தொடரும் சமூக விரோத கும்பல்களின் அட்டகாசங்கள், என, திருப்பூர் மாநகரின் அவலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்பிரச்னைகளுக்கு புது கமிஷனர் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மாநகர மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
"குற்றம் தடுக்க சிறப்பு கவனம்'
போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா கூறியதாவது: திருப்பூரில் முக்கிய பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். "டிராபிக் வார்டன்' பிரிவில், மேலும், 100 பேர் நியமிக்கப்படுவர். திருப்பூர், வளர்ச்சி பெற்ற தொழில் நகரம்; பொருளாதார பரிவர்த்தனை மிகுந்த பகுதி; மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதனால், குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன. இவற்றை தடுக்க, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முழுமையாக நடத்தப்படும். தற்போதுள்ள இளைஞர் காவல் படையினர், போலீசாக தேர்வு பெற்றுள்ளனர். பயிற்சிக்குபின், ஸ்டேஷனில் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, போலீஸ் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும்.
அதிகளவில் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பாதுகாப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுபோன்ற குற்றங்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்தி, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காணாமல் போகும் நபர்கள்; தற்கொலை சம்பவங்கள் குறித்து, தனி கவனம் செலுத்தப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்