22/08/2026
46 ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
------------------------------------------------
சவுதி அரேபியாவில் நடைபெற்ற 46 ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில் 5 ஆம் பிரிவில் போட்டியிட்ட மாணவன் அல் ஹாபிழ் எம் . ஐ. முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கண்டி கல்கின்னையைச் சேர்ந்த இம்தாத் ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவராவர்.
ஆகஸ்ட் 19 ஆம் திகதி
புனித மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் நடை பெற்ற பரிசளிப்பு விழாவில்
இவருக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபா) பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கை தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த வெற்றியானது இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைத்த ஒரு வெற்றியும் கெளரவமுமாகும். அது இலங்கையில் புனித அல் குர்ஆன் மனனத்திற்கான எழுச்சியினை காட்டி நிற்கிறது.
இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி அரேபிய தூதரகம் மற்றும் சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியன இணைந்து இலங்கையில் கடந்த ஜனவரியில் நடாத்திய 3 ஆவது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் பிரிவில் அம் மாணவன் முதலிடத்தினை பெற்றுக்கொண்டார்.
இம்முறை இப் போட்டியில் 133 நாடுகளிலிருந்து 334 ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
முதற் தடவையாக நான்கு இலங்கையர்கள் இப் போட்டிற்கு தெரிவுசெய்யப்பட்டதுடன்
இந்த வருடமே இந்த சர்வேதச போட்டியில் பெண்கள் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதற்கமைய இலங்கையைச் சேர்ந்த இரு மாணவிகள் உட்பட நான்கு மாணவர்கள் இந்த குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்றனர்.
இலங்கையில் இருந்து இப் போட்டியில் பங்கேற்ற நான்கு மாணவர்களும் ஆரம்ப சுற்றிலே தெரிவுசெய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை சிறப்பம்சமாகும்.
இதற்கமைய, கண்டி கல்கின்னையைச் சேர்ந்த ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் மாணவரான முஹம்மது இம்தாத் இயாஸ் முஹம்மத், புத்தளத்தினைச் சேர்ந்த அடுலுகம தாரு ஆயிஷா மத்ரஸாவின் மாணவியான எம்.ஏ. பாத்திமா நிலாமா, தெஹிவளையினைச் சேர்ந்த தாருல் உலூம் மத்ரஸாவின் மாணவரான முஹம்மத் இப்பத் சயீத் மற்றும் கண்டி, எலமல்தெனியவினைச் சேர்ந்த உம்முல் குரா மகளிர் அரபுக் கல்லூரி மாணவியான மும்தாசா மன்சூர் ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச குர் ஆன் போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் யசீர் அப்துல்ரஹ்மான் அல்ஹாஸ்மி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற வழியனுப்பும்
நிகழ்வில் சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் தூதரக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது போட்டியாளர்களுக்கும், அவர்களுடன் பயணித்த பெற்றோர்களுக்குமான பிரயாண டிக்கெட் மற்றும் விசா ஆகியவற்றுக்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
வல்ல அல்லாஹ் வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவரின் எதிர்கால கல்வியில் குறைவில்லாக் கிருபையை நல்குவானாக.
இப்போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கும், மக்கா மற்றும் மதீனா நகரிலுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை
சுட்டிக்காட்டத்தக்கது.
சர்வதேச ரீதியில் ஒவ்வொரு நாடாகவும், மற்றும் பிரமாண்டமாக சர்வதேச அளவிலும் தொடராக புனித அல் குர்ஆன் மனனப் போட்டிகளை நடாத்தும் சவூதி அரேபிய அரசுக்கும், குறிப்பாக இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மான் (أيده الله) அவர்களுக்கும் , முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கெளரவ கலாநிதி அப்துல் லத்தீப் ஆல் அஷ்ஷேய்க் அவர்களுக்கும், அனைத்து சவூதி அரேபிய அதிகாரிகள் குடிமக்களுக்கும் அளவிலா நன்மைகளை வல்ல அல்லாஹ் வழங்குவானாக.