03/09/2026
சுயநிர்ணய உரிமைக்கும்
மாகாண சபைத் தேர்தலுக்கும்
சம்பந்தம் ஏற்படுத்தி கோரிக்கை வைக்கப்பட்டதா என்பதனை சாணக்கியன் தெளிவுபடுத்த வேண்டும்
சாணக்கியன்
வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன உதாரணம் மயிலத்தமடு–மாதவனை – நெதர்லாந்து தூதுவரிடம் சுட்டிக்காட்டினேன்.
இன்றையதினம் இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் HE Wiebe de Boer அவர்களை சந்தித்து, வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினேன்.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தூதுவரிடம் சுட்டிக்காட்டினேன்.
குறிப்பாக, மயிலத்தமடு–மாதவனை போன்ற எமது பாரம்பரிய மேய்ச்சல் தரைப் பகுதிகளை எம்மிடமிருந்து அபகரித்து, அங்கு குடியேற்றங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இதற்கு முக்கியமான உதாரணமாகும் என்பதை எடுத்துரைத்தேன்.
ஒருபுறம் நாம் அரசியல் தீர்வை வலியுறுத்தி வருகின்றோம். மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றோம். ஆனால், அதேவேளை தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் பெரும்பான்மை இனக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இதே வேகத்தில் தொடருமானால், எதிர்காலத்தில் மாகாண சபைகள் உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்டமைப்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
புதிய அரசியலமைப்பு அல்லது புதிய அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும், தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதாசாரம் குறைக்கப்பட்டால், அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பிரயோசனமும் கிடைக்காத சூழ்நிலை உருவாகும் என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டினேன்.
எமது தமிழ் மக்கள் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல், வேறு சில விடயங்களை மட்டும் அரசாங்கத்தின் சாதனைகளாக முன்னிறுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது மக்களின் அரசியல் உரிமைகள், காணி உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதே முக்கியமானது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட வடக்கு–கிழக்கு பகுதிகளில் நீண்டகாலமாகத் தீர்வின்றி நீடித்து வரும் காணி உரிமைப் பிரச்சினைகள், விடுவிக்கப்படாத இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள், மகாவலி விரிவாக்கத் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள், வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களங்களின் எல்லை நிர்ணயங்கள், தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் உருவாகியுள்ள காணி உரிமைச் சிக்கல்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகளையும் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்.
அதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சுயநிர்ணய உரிமை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடினோம்.
அண்மையில் ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்னெடுத்துள்ள அரசியல் ஒத்துழைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும், அதனைத் தொடர்ந்து ஆறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பாகவும் ஆழமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், காணி உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே, இந்த விடயங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனமும் ஈடுபாடும் அவசியம் என்பதை நெதர்லாந்து தூதுவரிடம் வலியுறுத்தினேன்.