02/06/2026
காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தின் இலத்திரனியல் மயப்படுத்தல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்துடன் சிநேகபூர்வ ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்
காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தினை இலத்திரனியல் மயப்படுத்துதல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழக நூலகத்துடன் சிநேகபூர்வ ஒப்பந்தம் (MOU) ஒன்றை மேற்கொள்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (02) மொறட்டுவை பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை கெளரவ நகர முதல்வர் SHM. அஸ்பர் JP UM, கெளரவ நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் றியாஜ் மஹ்மூத், நகரசபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சாகிர் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலை மொறட்டுவை பல்கலைக்கழக நூலகக் குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தினர். இதற்காக பல்கலைக்கழக நூலகர் அவர்களுக்கும், குறிப்பாக உதவி நூலகர் புடின் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும்.
மேலும், எமதூரைச் சேர்ந்த மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பொறியியலாளர் நிஹாஜ் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுள்ள ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக, காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்தை இலத்திரனியல் மயப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழக நூலகத்திற்கும் காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்திற்கும் இடையில் எதிர்கால கல்வி, ஆய்வு மற்றும் நூலக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டன.
இந்நிகழ்வு, இரு நிறுவனங்களுக்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் நூலக சேவைகளின் மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது.