05/06/2026
இரவு நேரம் ஒரு 8.30 இருக்கும். ஹாஸ்டல் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. எங்கள் அறையில் நானும் ஹப்சாவும் மாத்திரமே விழித்திருந்தோம்.
நான் செல்பேசியை எடுத்து யார் என்று பாரக்க, ஹப்சாவின் வீட்டிலிருந்தே அழைந்திருந்தனர். நான் செல்பேசியை ஹப்சாவிடம் நீட்டினேன்.
அவளும் அழைப்பை ஏற்று பேசினாள். அவள் முகம் மாறியதை நான் அவதானித்தேன். இருந்தும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. உயிரியல் கூறிய சமிபாடு பாடத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் எழுந்து குளியலறை சென்று வுழு எடுத்து வந்து 2 ரக்அத்துகள் அவள் தொழுததை நான் பார்த்தேன். அவளின் சுஜூத் வழமையை விட நீண்டிருந்தது. அவளின் அழுகை என் காதுகளை எட்டின. எனக்கு கஷ்டமாகிப் போனது. அவள் தொழுது முடிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தேன்.
அவளின் கண்கள் சிவந்திருந்தன. நான் "யே ஹப்சா? என்ன நடந்து?" என கரிசணையுடன் கேட்டேன். அவள் குரல் உடைந்து வெளிப்பட்டது.
"எகட பெரியம்மக்கு சொகமில்ல என்டு சொல்லி இருந்தேன் தனே! இப்ப நல்லா கொஞ்சம் சீரியசாம்... வாப்பா வாரதாம் என்ன கூட்டிட்டு போக..." என்று சத்தம் வராமல் அழுதாள்.
எனக்கு என்ன ஆறுதல் கூறவதென்று தெரியவில்லை. ஹப்சா எவ்வளவு இலகிய மனமுடையவள் என்பது எனக்கு தெரியும். அவளின் வெடித்துச் சிதற காத்திருக்கும் அழுகையை அவள் கட்டுப்படுத்துவது எனக்கு புரிந்தது.
எனக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற சொற்கள் இன்றி போகவே, அச் சிறு பெண்ணை அணைத்துக் கொண்டேன். அவள் விம்மி விம்மி அழுதாள்.
"சரியாகும்... அல்லாஹ் லேசாக்குவான்..." என்று கூறி அவள் முதுகை நீவி விட்டேன்.
அடுத்த சில நிமிடங்களுக்குள் ஹப்சாவின் தந்தை வந்து ஹப்சாவை அழைத்துச் சென்றுவிட்டார்.
எங்களின் அறையில் 5 பேர் இருந்தோம். அன்று இரவு நடந்ததை மற்ற மூவரும் அறியவில்லை. அவர்கள் அன்று நேரமாய் உறங்கச் சென்றிருந்தனர்.
தனிமையில் எனக்குள் பல எண்ணங்கள் ஓடின. கேள்விகள் தோன்றின.
முதன் முதலில் அந்த கஷ்டமான செய்தியை கேட்டதும், எப்படி அப் பெண்ணினால் அல்லாஹ்வை தொழ முடிந்தது? அவள் முதலில் கஷ்டத்தை கூறியது, உதவி கேட்டது அல்லாஹ்விடமே! பக்கத்திலே அமர்ந்திருந்த என்னிடம் கூட அவள் கூறவில்லை.
நான் அவளின் நிலையில் இருந்திருந்தால், முதலில் என்ன செய்திருப்பேன்? அல்லாஹ்வை தான் முதலில் நினைவு கூர்ந்திருப்பேனா? அவனிடம் தான் உதவி தேடியிருப்பேனா?
மனசாட்சி கூறியது இல்லை என்று!
அன்று இரவு ஹப்சாவின் செயல் என்னை வியக்கச் செய்தது. இவ்வுலக வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கச் செய்தது.
நம்மில் எத்தனை பேருக்கு முடியும்?
இன்பமோ, துன்பமோ, இலேசோ, கஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் _ *என்ன ஒரு விடயம் நமக்கு நடந்தாலும் எம்மை படைத்த இறைவனை முதன்மை படுத்துவதற்கு?*
அன்று அச் சிறு பெண், அவளின் செயல்கள் மூலம் மெளனமாய் ஒரு விடயத்தை எனக்கு உணர்த்திவிட்டுச் சென்றாள்.
அது தான் இவ்வுலகினில் எமக்கு என்னவொரு விடயம் நடந்தாலும் நாம் முதலில் நாட வேண்டியது எம்மை படைத்த அல்லாஹ்வை தான்! அது எந்த விடயமாயினும் பரவாயில்லை!!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 2:153)