18/09/2024
எண்பத்து மூன்று சிவில் அமைப்புக்களும் ஏழு கட்சிகளும் இணைந்து கட்டிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரச்சாரக் கூட்டங்களில் ரெலோ மற்றும் புளொட் கட்சிகளின் தலைவர்களைத் பூதக் கண்ணாடியை வைத்து தேட வேண்டியிருக்கின்றது. செல்வமும், சித்தரும் இதுவரை இரண்டு பிரச்சாரக் கூட்டங்களில் மாத்திரமே கலந்து கொண்டிருக்கிறார்கள். புளொட்டின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலராவது சங்குக்காக வாக்குக் கேட்கிறார்கள். ஆனால், ரெலொவின் விந்தனைத் தவிர வேறு யாரும் பிரச்சாரப் பணிகள் பக்கத்திலேயே வருகிறார்கள் இல்லை. ரெலோ மற்றும் புளொட்டின் தலைமைகள் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ‘டிமிக்கி’ கொடுப்பதைப் புரிந்து கொண்டாலே, தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்துக்குப் பின்னாலுள்ளவர்கள் பலரின் செப்படி வித்தைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
விக்னேஸ்வரனின் கட்சியிலுள்ள இளைஞர்கள், குறிப்பாக முன்னணியில் இருந்து விலகி இணைந்து கொண்ட மணிவண்ணன் குழுவினர், வேண்டா வெறுப்பாக பொது வேட்பாளருக்காக வாக்குக் கேட்கும் கூட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுகிறார்கள். மணிவண்ணன் குழுவினர் தங்களின் எதிர்கால அரசியலுக்கான ஒரு போக்கிடமாகவே விக்னேஸ்வரனின் கட்சியை அணுகுகிறார்கள். விக்னேஸ்வரனும் மணிவண்ணன் குழுவினரை, பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெறுமதிகளாகவே காணுகிறார். விக்னேஸ்வரன் ரணிலின் விசுவாசியாக மாறி நீண்டநாளாகிறது. அவரின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில்தான், பொதுக் கட்டமைப்பில் இணைந்தார். நேரடியாக ரணிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினால், தமிழ்த் தேசிய வேடம் கலைந்துவிடும் என்பதால், அவர் சங்கின் பின்னால் வந்திருக்கிறார். அது, மணிவண்ணன் குழுவினருக்கும் தெரியும். அதுதான், அந்த வேண்டா வெறுப்பான நடவடிக்கைகள்.
தமிழரசுக் கட்சியின் மாவையும்(!) சிறீதரனும் மாத்திரமே இப்போது அரியத்தாரை தூக்கிச் சுமக்கிறார்கள். பொதுக் கட்டமைப்பிலுள்ள எண்பத்து மூன்று அமைப்புக்களுக்கும் ஏழு கட்சிகளுக்கும் இல்லாத நெருக்கம் அரியத்தாரோடு, மாவைக்கும் சிறீதரனுக்கும் இருக்கின்றது. ஒரே கட்சிக்காரர்கள். ஒரு காலத்தில் ஒன்றாக பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அரியத்தாருக்காக ‘சங்கை’ மாத்திரமல்ல, சில ஆயிரம் வாக்குகளையும் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டினை சிறீதரன் வெளிப்படுத்துகிறார். அவர், கிளிநொச்சியில்