Divisional Secretariat Thunukkai

Divisional Secretariat Thunukkai Service Public Service

பொதுமக்கள் முறைப்பாடுகளை நேரடியாக மாவட்ட செயலாளரிடம் தெரிவிக்கும் வசதி==================================================...
26/08/2026

பொதுமக்கள் முறைப்பாடுகளை நேரடியாக மாவட்ட செயலாளரிடம் தெரிவிக்கும் வசதி
======================================================

துணுக்காய் பிரதேச பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

துணுக்காய் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரச சேவைகள் மற்றும் உதவித்திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமான முறையிலும், உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச உதவித்திட்டங்கள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் ஏதேனும் பாதிப்பை எதிர்கொண்டிருந்தாலோ அல்லது தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினாலோ, அதுகுறித்த தங்களது முறைப்பாடுகளை நேரடியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

மேலும், ஏதேனும் திட்டம் அல்லது அரச சேவையை நடைமுறைப்படுத்தும் போது முறைகேடு, மோசடி, ஊழல், பாரபட்சம், தகுதியற்ற நபர்களுக்கு நன்மை வழங்குதல், தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்படுதல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவை இடம்பெறுவதாக பொதுமக்கள் கருதினால், அவை தொடர்பான தகவல்களையும் முறைப்பாடுகளையும் தயக்கமின்றி மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

முறைப்பாடுகள் எவ்வாறு தெரிவிக்கலாம்?

பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கீழே வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை Scan செய்து, அதன்மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும்.

QR குறியீட்டை பயன்படுத்த முடியாதவர்கள் தங்களது முறைப்பாட்டை எழுத்து மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்

மாவட்ட செயலாளர்
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு

மேலும், பொதுமக்கள் தங்களது முறைப்பாட்டை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரை நேரடியாகச் சந்தித்தும் சமர்ப்பிக்க முடியும்.

முறைப்பாடுகள் தொடர்பான நடவடிக்கை

QR குறியீடு, எழுத்து மூலமான முறைப்பாடு அல்லது நேரடி சந்திப்பு ஆகிய வழிகளில் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் முறைப்பாடுகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பாக, இயன்றவரை முறைப்பாட்டாளருக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்களது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஏதேனும் அநீதி, முறைகேடு அல்லது மோசடி இடம்பெறுவதாகக் கருதினால், அதனை மறைக்காமல் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் முறைப்பாடு உங்கள் உரிமையைப் பாதுகாக்கும் முக்கியமான ஒரு குரல்.

பொதுமக்கள் அச்சமின்றி, உண்மையான தகவல்களின் அடிப்படையில் தங்களது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

முன்னாள் பிரதேச செயலாளர் அமரர் நா. நந்தகுமார் ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது===========================...
25/08/2026

முன்னாள் பிரதேச செயலாளர் அமரர் நா. நந்தகுமார் ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
=======================================================

துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய அமரர் நா. நந்தகுமார் அவர்கள், 29.06.2008 அன்று தனது கடமை நேரத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்தார். மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது சேவையையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், துணுக்காய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், இவ்வருடத்திற்கான அமரர் நா. நந்தகுமார் ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு நேற்று (24.08.2026) திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இராமதாஸ் ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, அமரர் நா. நந்தகுமார் அவர்களின் துணைவியாரான திருமதி நந்தகுமார் நகுலாம்பிகை அவர்களினால் அமரர் நா. நந்தகுமார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, இரத்ததான நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமரர் நா. நந்தகுமார் அவர்களின் மக்கள் சேவையையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்ததுடன், அவருடைய மனிதநேயப் பண்புகளையும் சமூகத்தின் மீதான அக்கறையையும் நினைவுகூரும் வகையில் இரத்ததானம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இரத்ததானம் வழங்குவதற்காக மொத்தம் 82 குருதிக்கொடையாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்களில் மருத்துவப் பரிசோதனை மற்றும் உடற்தகுதி அடிப்படையில் 71 பேர் இரத்ததானம் வழங்குவதற்குத் தகுதியானவர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, தமது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இரத்ததானம் வழங்கியவர்களில் 39 பேர் பொதுமக்களாகவும், 7 பேர் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாகவும், 23 பேர் துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களாகவும் இடம்பெற்றனர். இவ்வாறு பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து இரத்ததானம் வழங்கியமை, அமரர் நா. நந்தகுமார் அவர்களின் நினைவை மக்கள் சேவையுடன் இணைத்து முன்னெடுக்கும் ஒரு சிறப்பான மனிதநேயச் செயற்பாடாக அமைந்தது.

இரத்ததானம் என்பது உயிரைக் காக்கும் உன்னதமான மனிதநேயப் பணியாகும். ஒரு தனிநபரால் வழங்கப்படும் இரத்தம் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள், விபத்துக்குள்ளானவர்கள், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் உள்ளிட்ட பலரது உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவக்கூடியதாகும். எனவே, அமரர் நா. நந்தகுமார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இவ்வாறான இரத்ததான நிகழ்வு, அவரது நினைவை நிலைநிறுத்துவதுடன் சமூகத்திற்கான அர்த்தமுள்ள மனிதநேயப் பணியாகவும் தொடர்கின்றது.

இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , இரத்ததான நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய யாழ்ப்பாணம் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் துணுக்காய் பிரதேச செயலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்க முன்வந்த அனைத்து குருதிக்கொடையாளர்களுக்கும், குறிப்பாக தமது பெறுமதியான நேரத்தை ஒதுக்கி மனிதநேய அடிப்படையில் இரத்தத்தை தானமாக வழங்கிய பொதுமக்கள், அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள், துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துணுக்காய் பிரதேச செயலகம் சார்பாக இதயபூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.

அமரர் நா. நந்தகுமார் அவர்களின் சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படுவதுடன், அவரது நினைவாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான மனிதநேயப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

ஊடகப் பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 💧===================================================வறட்சி காரணமாக உங்கள் பகுதியில் க...
23/08/2026

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 💧
===================================================

வறட்சி காரணமாக உங்கள் பகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகின்றதா?

வறட்சியால் பாதிக்கப்பட்டு குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்கள், தங்களது கிராம உத்தியோகத்தரிடம் (கிராம சேவகர்) உடனடியாக தங்களது குடும்ப விவரங்களையும் குடிநீர் தேவையையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

💧 அவசர குடிநீர் விநியோகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலைகள்

கீழ்க்காணும் நிலைமைகள் காணப்படும் பகுதிகளுக்கு அரசாங்க வழிகாட்டலின் அடிப்படையில் Bowser மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்

1️⃣ வறட்சி நிலைமை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் குறித்த பிரதேசத்தில் கடுமையான உலர் வானிலை அல்லது வறட்சி நிலைமை எதிர்வு கூறப்பட்டிருந்தால் அல்லது பிரகடனப்படுத்தப்பட்டிருந்தால்.

2️⃣ நீர் ஆதாரங்கள் வற்றிப்போதல்
குறித்த கிராமத்தில் உள்ள கிணறுகள், குழாய்க் கிணறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் (Water Sources) அனைத்தும் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் முற்றாக வற்றிப்போயிருந்தால்.

3️⃣ பொது நீர் ஆதாரம் 750 மீற்றருக்குள் இல்லாமை
பயன்படுத்தக்கூடிய வேறு எந்தவொரு பொது நீர் ஆதாரமும் உங்கள் வசிப்பிடத்திலிருந்து 750 மீற்றர் தூரத்திற்குள் இல்லாதிருந்தால்.

4️⃣ நீர் விநியோகத் திட்டங்கள் இல்லாமை
குறித்த பகுதியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அல்லது உள்ளூராட்சி மன்றங்களின் குடிநீர் விநியோகத் திட்டங்கள் எதுவும் செயற்பாட்டில் இல்லாதிருந்தால்.

பொதுமக்கள் கவனத்திற்கு

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகள் உங்கள் பகுதியில் காணப்படுகின்றன எனில், தாமதிக்காமல் உங்கள் கிராம உத்தியோகத்தரை (கிராம சேவகர்) தொடர்புகொண்டு உங்கள் குடும்பத்தின் குடிநீர் தேவையைப் பதிவு செய்யுங்கள்.

கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையின் அடிப்படையில், துணுக்காய் பிரதேச செயலகத்தினால் தேவையான இடங்களுக்கு Bowser மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

💧 ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம்!

ஊடகப்பிரிவு ,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

23/08/2026

📢📢📢🖐🖐🖐

🩸 இரத்ததான முகாம் – 2026 🩸துணுக்காய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்முன்னாள் பிரதேச செயலாளர் அமரர் நாகலிங்கம் நந்தகுமார் ...
21/08/2026

🩸 இரத்ததான முகாம் – 2026 🩸

துணுக்காய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்
முன்னாள் பிரதேச செயலாளர் அமரர் நாகலிங்கம் நந்தகுமார் அவர்களின் நினைவாக

“உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்”

என்ற தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திகதி: 24.08.2026 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி
இடம்: மாநாட்டு மண்டபம், பிரதேச செயலகம், துணுக்காய்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
பிரதேச செயலகம், துணுக்காய்
தொலைபேசி: 0212285266

பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூகமட்ட அமைப்புகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பங்கேற்று இம்மனிதநேயப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் பங்களிப்பு ஒருவரின் உயிரைக் காப்பாற்றக்கூடும்.

🩸 உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம்!

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்===============================================...
10/08/2026

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
===========================================================

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில், துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்து புறப்படும் நேரங்கள்:

* காலை 6.00 மணி – துணுக்காய்
* காலை 6.10 மணி – மல்லாவி
* காலை 7.00 மணி – மாங்குளம்
* காலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

ஊடகப் பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

தேசிய தூய்மைப் பணி “அத்தம” – துணுக்காய் பிரதேச  செயலகப் பிரிவில் 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மக்கள் பங்கேற்புடன் முன்...
08/08/2026

தேசிய தூய்மைப் பணி “அத்தம” – துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மக்கள் பங்கேற்புடன் முன்னெடுப்பு
=================================================
தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப் பணித்திட்டம், இன்று (08.08.2026) துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் குறித்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிராம மட்ட அலுவலர்கள், இராணுவத்தினர், பொலிஸார், பொதுமக்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்புடன் பல்வேறு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வீடுகள் மற்றும் காணிகளுக்கு முன்னால் காணப்பட்ட பற்றைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டதுடன், கைவிடப்பட்ட பொது கட்டடங்கள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன. மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள பொது இடங்கள், வீதியோரங்கள் மற்றும் வடிகால் பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் தேவைக்கேற்ப சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தம தேசிய தூய்மைப் பணியின் கீழ் சுத்தப்படுத்தப்பட்ட முக்கிய இடங்கள்

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் கீழ்க்காணும் இடங்களில் தூய்மைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன:

1. துணுக்காய் கிராம அலுவலர் பிரிவு – துணுக்காய் பேருந்து நிலையத்தில் சிரமதானம் நிகழ்வு
2.கல்விளான் கிராம அலுவலர் பிரிவு – பொதுநோக்கு மண்டபம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சிரமதான நிகழ்வு
3. உயிலங்குளம் கிராம அலுவலர் பிரிவு –பொது நோக்கு மண்டபத்தில் சிரமதான நிகழ்வு
4. யோகபுரம் மேற்கு கிராம அலுவலர் பிரிவு –கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தை சூழ சிரமதான நிகழ்வு
5. மல்லாவி கிராம அலுவலர் பிரிவு –ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ சிரமதான நிகழ்வு
6. யோகபுரம் மத்தி கிராம அலுவலர் பிரிவு – கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தை சூழ சிரமதான நிகழ்வு
7. திருநகர் கிராம அலுவலர் பிரிவு – சுப்பிரமணிய ஆலயத்தில் சிரமதான நிகழ்வு
8. புத்துவெட்டுவான் கிராம அலுவலர் பிரிவு – கிராம அலுவலகத்தைக் சூழ சிரமதான நிகழ்வு
9. அமதிபுரம் கிராம அலுவலர் பிரிவு –பொதுநோக்கு மண்டப சிரமதான நிகழ்வு
10. அம்பலப் பெருமாள் குளம் கிராம அலுவலர் பிரிவு –அம்பல விநாயகர் ஆலயத்தைச் சூழ சிரமதான நிகழ்வு
11. ஆலங்குளம் கிராம அலுவலர் பிரிவு –வேட்டையடைப்பு பொதுநோக்கு மண்டபத்தை சூழ சிரமதான நிகழ்வு
12. தேறாங்கண்டல் கிராம அலுவலர் பிரிவு –பொதுநோக்கு மண்டப கட்டடத்தைச் சூழ சிரமதான நிகழ்வு
13. யோகபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவு –பொது விளையாட்டு மைதான சிரமதான நிகழ்வு
14. புகழேந்தி நகர் கிராம அலுவலர் பிரிவு –பொதுநோக்கு மண்டப சிரமதான நிகழ்வு
15. பாரதி நகர் கிராம அலுவலர் பிரிவு –பொது விளையாட்டு மைதான சிரமதான நிகழ்வு
16. அணிஞ்சியன்குளம் கிராம அலுவலர் பிரிவு –மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு
17. தென்னியன் குளம் கிராம அலுவலர் பிரிவு –பொதுநோக்கு மண்டப த்தை சூழ சிரமதான நிகழ்வு
18. பழைய முறிகண்டி கிராம அலுவலர் பிரிவு –முன்பள்ளி மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்கள் சிரமதான நிகழ்வு
19. ஐயங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவு –பொதுநோக்கு மண்டபத்தில் சிரமதான நிகழ்வு
20. கோட்டை கட்டிய குளம் கிராம அலுவலர் பிரிவு –கோட்டை சிவன் ஆலயத்தில் சிரமதானிகள்

மேற்குறித்த இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தூய்மைப் பணிகளின் மூலம் சுற்றுச்சூழல் தூய்மை மேம்படுத்தப்பட்டதுடன், பொது இடங்களின் சுகாதாரத் தன்மையைப் பேணுதல், கழிவுகள் தேங்குவதைத் தடுத்தல், வடிகால் அமைப்புகளின் செயற்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தப்பட்டன.

இத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த துணுக்காய் பிரதேச செயலாளர், தூய்மையானதும், பசுமையானதும், பாதுகாப்பானதுமான சுற்றுச்சூழலை உருவாக்குவது அரச நிறுவனங்களின் பொறுப்பு மாத்திரமல்ல எனவும், ஒவ்வொரு குடிமகனும் தனது வீடு, காணி மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பேணுவதன் மூலம் இந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், “அத்தம” தேசிய தூய்மைப் பணித்திட்டம் ஒரு நாள் நிகழ்வாக மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அந்த வகையில், துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரம் தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பங்கேற்று அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்கள், இராணுவத்தினர், பொலிஸார், சமூக அமைப்புகள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணுக்காய் பிரதேச செயலகத்தின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

“தூய்மையான சுற்றுச்சூழல் – ஆரோக்கியமான சமூகம் – அனைவரின் பொறுப்பு”

ஊடகப் பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

கலாசார விழா – 2026 கலைஞர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன===================================================...
07/08/2026

கலாசார விழா – 2026
கலைஞர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
===================================================
துணுக்காய் பிரதேச கலாசார பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கலாசார விழா – 2026” நிகழ்வின் போது, பல்வேறு கலைத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் பங்களித்து வரும் தகுதியான கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கில் கலைஞர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, தகுதியுடைய கலைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 21.08.2026

விண்ணப்பப் படிவம்:
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
அல்லது

துணுக்காய் பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தரிடம் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு:
பிரதேச செயலகம் – துணுக்காய்
கலாசார உத்தியோகத்தரை அல்லது தங்கள் பிரிவின் கிராம அலுவலரை தொடர்புகொள்ளவும்.

கலைஞர்களின் திறமையையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது விண்ணப்பங்களை உரிய காலத்துக்கு (21/08/2026) முன்னர்
“தலைவர்
கலாசார பேரவை
பிரதேச செயலகம்
துணுக்காய்” எனும் முகவரிக்கு பதிவு தபால் மூலம்
சமர்ப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஊடகப் பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்====================================================வடக்கு மாகாண கௌரவ ஆள...
05/08/2026

விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
====================================================
வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு கிடைக்கப்பெற்ற விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், கௌரவ ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. ச. சிவசிறீ அவர்களின் தலைமையில் , இன்று (05.08.2026) காலை 10.00 மணிக்கு துணுக்காய் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான நடைமுறைத் தீர்வுகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் துணுக்காய் உதவி பிரதேச செயலாளர், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் (வடமாகாணம்), பிரதி விவசாயப் பணிப்பாளர் – முல்லைத்தீவு, பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் – முல்லைத்தீவு, நீர்ப்பாசனப் பொறியியலாளர் – வவுனிக்குளம், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் – துணுக்காய், நெல் சந்தைப்படுத்தல் சபையின் முகாமையாளர், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின் போது, தற்போதைய பயிர்ச் செய்கையை பாதித்து வரும் பல்வேறு சவால்கள் குறித்து விவசாயிகள் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரடியாக முன்வைத்தனர். குறிப்பாக, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், வயல் வாய்க்கால்களின் பராமரிப்பு, பயிர் பாதுகாப்பு, விவசாய உள்ளீடுகளின் தடையற்ற விநியோகம், நெல் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தல், காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள், இயற்கை அனர்த்தங்களினால் விளையும் பாதிப்புகள், விவசாயக் காப்புறுதி மற்றும் இழப்பீடு தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியதுடன், உடனடியாக தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகளும் கலந்துரையாடப்பட்டன.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், நிலையான விவசாய அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதும் அரச திணைக்களங்களும் விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமே சாத்தியமாகும் என்பதை இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

“விவசாயி வளமானால் நாடு வளமாகும்” என்ற உயரிய நோக்குடன், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் வகையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட ஆரம்பக் கொடுப்பனவு வழங்கப்பட்டது============================...
30/07/2026

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட ஆரம்பக் கொடுப்பனவு வழங்கப்பட்டது
==========================================================

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 156 பயனாளிகளுக்கு, தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டத்தின் ஆரம்பக் கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு நேற்று (28/07/2026) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு துணுக்காய் பிரதேச செயலாளர் திரு. இராமதாஸ் ரமேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர். செல்லத்தம்பி திலகநாதன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கான ஆரம்பக் கட்ட கொடுப்பனவை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திரு வை கஜந்தன், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நளாஜினிதேவி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வீட்டுத்திட்டத்தின் கீழ், சமுர்த்தி வங்கியின் ஊடாக ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலும் ரூ. 20 இலட்சம் ஆரம்பக் கட்டமாக வைப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து முதல் தவணையாக ரூ. 2 இலட்சத்திற்கான கொடுப்பனவை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.

இந்த வீட்டுத்திட்டம், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முக்கியமான அரசாங்கத்தின் முயற்சியாகும்

ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.

Address

Thunukkai
Mallavi

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212285262

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Thunukkai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Thunukkai:

Shortcuts

Share