01/01/2026
"கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் நல்லாட்சிக்கும், மக்கள் நலனுக்கும் ஒரு மாதிரி பிரதேச செயலகமாக உருவாக்க, ஒரே நோக்குடன், ஒரே அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்." பிரதேச செயலாளர் உரை*
=====================================
பிரதேச செயலகத்தின் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை 9.00 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமானது பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் செல்வி.சி.ஷர்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் திரு. R. விஜயகுமார் அவர்கள் தலைமை உரையாற்றினார் அவர்கள் தனது கருத்துரையில் = ஒரு புதிய ஆண்டின் பணிகளை நாம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், நாட்டின் தற்போதைய சவால்களையும், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பையும் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.
இத்தகைய சூழலில், அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கை, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு செயல்திட்டமாகும். மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி, திறன் மிக்க மற்றும் பொறுப்புள்ள அரச நிர்வாகம், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை இதன் மையக் கருத்துகளாகும்.
இந்தக் கொள்கைகள் வெற்றி பெற வேண்டுமெனில், அதற்கான முக்கிய தூண் அரச உத்தியோகத்தர்களே. கொள்கைகள் ஆவணங்களாக மட்டுமே இருப்பதில்லை; அவை மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றமாக மாறுவது, நமது தினசரி சேவைகளின் மூலமே. .
நாம் செய்த வேலை எவ்வளவு எவ்வளவு பணம் செலவிட்டோம் என்பதைக் காட்டிலும் அதனால் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை மதிப்பிடும் நிர்வாகமாக நாம் செயல்பட வேண்டும்.
எனவே, ஒவ்வொரு திட்டத்திற்கும் தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும்,
ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அளவிடக்கூடிய முடிவுகள் இருக்க வேண்டும்,
ஒவ்வொரு செலவுக்கும் பொது நலன் பிரதிபலிக்க வேண்டும்.
மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, இளைஞர் திறன் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சியை வலுப்படுத்துதல் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த, முடிவுகள் சார்ந்த செயல்பாடு அவசியமாகிறது. இதற்கு துறை ரீதியான ஒத்துழைப்பும், மனிதநேயத்துடன் கூடிய சேவை மனப்பாங்கும் தேவை.
அரச உத்தியோகத்தர் என்ற வகையில், நமது பங்களிப்பு சில அடிப்படை அம்சங்களில் வெளிப்பட வேண்டும்:
கடமை உணர்வு, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை, மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவை.
மேலும், புதுமை, தொழில்நுட்பப் பயன்பாடு, நேர முகாமை மற்றும் குழுப் பணியாற்றல் ஆகியவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அத்துடன் நலன்புரி நன்மைகள் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு குறைப்பதற்கு அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் திட்டங்கள் தயாரித்து உரிய இடங்களுக்கு அனுப்பி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
2026 ஆம் ஆண்டை, நம்பிக்கையின் ஆண்டாக, செயல்திறன் கொண்ட அரச சேவையின் ஆண்டாக,மக்கள் நம்பும் நிர்வாகத்தின் ஆண்டாக
மாற்றுவோம்.
இந்த புதிய ஆண்டு, அனைவருக்கும் பொறுப்புணர்வும், சேவை மனப்பாங்கும் நிறைந்ததாக அமைய வாழ்த்தி,
எனது உரையை இத்துடன் நிறைவு செய்தார்.
தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், சமுக சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் என அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்