02/02/2026
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?
"கல்முனை மாநகர சபைத் தேர்தல் பிட்போடப்பட்டதும் ஒருவகையில் நல்லதுதான், கல்முனை மாநகரம் கூறு போடப்படாமல்
சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகள் நிறைவேறும்" என்று அண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரால் கல்முனை நகரில் துணிச்சலாக பதிவு செய்த கருத்துக்களுக்கு நன்றி சொல்ல மருதூர் மக்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தேங்க்ஸ் தலைவரே!
முஸ்லீம் காங்கிரஷ் 80 களில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் காத்தான்குடியில் ஆரம்பிக்கப் பட்டாலும், முதன் முதலில் கூட்டம் நடத்தி அல்லாஹு அக்பர் கோசம் போட்டு கட்சிக்கு வலுவூட்டிய ஊர் சாய்ந்தமருது.
அதுமட்டுமன்றி 1987ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் மூலம் நடைபெற்ற முதலாவது மாகாண சபை தேர்தலில் ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற 17 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்களை அமோக வாக்களிப்பின் மூலம் சாய்ந்தமருது பெற்றுக் கொண்ட வரலாறும் உண்டு.
தொடர்ந்து 1988ஜனாதிபதித் தேர்தல், மற்றும் 1989,1994ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் கலப்பில்லாமல் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியில் மிகக் கூடிய பங்கு வகித்தவர்கள் சாய்ந்தமருது மக்கள் என்பதனை மறக்க முடியாது.
2001.02.04 ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பள்ளி மூன்றலில் உங்களின் தலைமைத்துவம் முடிசூடப்பட்ட நாள் என்பதும் இன்றும் நினைவு கூரத்தக்கது.
சாய்ந்தமருது இணைக்கப் பட்டு கல்முனை பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபையாக மாறிய போதெல்லாம் தனது முழு ஆதரவை கடந்த மூன்று தசாப்தங்களாக வழங்கி வரும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட கல்முனைத் தொகுதியில் அதிகூடிய வாக்காளர்களை கொண்ட பிரதேசம்.
தனது வடக்கு,தெற்கு எல்லைகள் பறிபோன நிலையிலும் தொடர்ந்து வாக்களித்தார்கள்.
அதனால்தான் என்னவோ உரிமையுடன்,
2014ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் அதாஉல்லா அவர்கள் கல்முனை மாநகர எல்லைக்குள் நான்கு சபைகளை உருவாக்க முனைந்தபோது,
அதனை எதிர்த்த உங்களது கட்சி முக்கியஸ்தர்கள் உடபட அனைவரும் கூறியது மாநகரை கூறு போடாமல், சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகம் அமைந்திருப்பது மட்டுமல்லாது, தனியாக 1890ஆம் ஆண்டிலிருந்து உள்ளூராட்சி சபை அமைந்திருந்த சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வழங்குவது என்ற விடயம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில்
2015ஆம் ஆண்டு அன்றைய நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக சாய்ந்தமருது மக்களின் அபிலாசையை நிறைவேற்று முகமாக தாங்கள் தலைமையில், கல்முனை எம் பி. உடபட அனைத்து பரிவாரங்களுடன், மறுபுறம் எமது பள்ளித்தலைவர் மர்ஹூம் வை. எம். ஹனீபா மற்றும் நாங்களும் சென்று அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, மற்றும் அமைச்சின் செயலாளர் திரு தடல்லகே ஆகியோரிடம் எமது அபிலாசைக்கான விண்ணப்பத்தை தாங்களே சமர்பித்து வழி மொழிந்தீர்கள்.
அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட முன்னாள் எம்.பி. ஹரிஷ் அவர்களுக்காக வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை அழைத்து வந்து சாந்தமருதுகாண அபிலாசைகள் நிறைவேற்றும் வாக்குறுதியை வழங்கியது நினைவில் இருக்கலாம். அதுவும் கல்முனை மாநகர மத்தியில் அமைந்துள்ள சந்தான்கேணி
மைதானத்தில் வைத்து வாக்குறுதி வழங்கினீர்கள். சாய்ந்தமருது மக்களும் நம்பி வாக்களித்தார்கள்.
அதற்குப் பின்னர் பலதடவைகள் உங்களை பள்ளிவாசல் தலைவர் மர்கூம் வை. எம். ஹனீபா அவர்கள் உட்பட நாங்கள் சுமார் 50க்கு மேற்பட்ட சந்திப்புக்களை மேற்கொண்டோம்.
இச்சந்திப்புக்களில் வாக்குறுதி அளித்த
நல்லாட்சியில் பிரதமரான ரணில் விக்ரமசிங்க அவர்களைக் கூட நாங்கள் உங்கள் தலைமையில் சந்தித்தோம். கொள்ளுப்பிட்டி பள்ளியிலிருந்து அலறி மாளிகைக்கு சென்றது என்ற விடயம் மறந்திருக்க நியாயமில்லை.
அந்த நேரத்தில் இணைப்புக்குழு தலைவராக இருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரிஷ் அவர்கள் அதனை துரிதமாக வழங்குவதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலக இணைப்பு குழுவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கௌரவ பிரதமருக்கு அந்த தீர்மானம் அனுப்பிவைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
அத்துடன் நீங்கள் ஓயவில்லை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அன்றைய உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் தலைமையில் அமைச்சில் இருநாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட சாய்ந்தமருது மக்களின் அபிலாசையை உடனடியாக நிறைவேற்றுவதற்கு
தீர்மானிக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
என்றாலும் அது நடைமுறைப் படுத்தாத நிலையில் ஏறக்குறைய 50ஆவது சந்திப்பை நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் உங்களது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
என்றாலும் கூட்டம் முடிவின்றி கலைந்தது கூட நினைவிருக்கலாம்.
அன்றிலிருந்து நீங்களும் மெதுவாக நழுவி விட்டீர்கள்.
அதனைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற சாய்ந்தமரூதூர் மக்கள் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30,31மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் எழுச்சிப் பேரணி ஒன்றை தொடர் தேர்ச்சியாக நடத்தி தமது அபிலாசைகளை உலகுக்கு வெளிக்காட்டி பறைசாற்றினர்.
விகிதாசார பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வட்டாரம் இணைத்த 60:40 என்ற உள்ளூராட்சி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வட்டாரப் பிரிப்பில் 6 வட்டாரங்களுடன் சாய்ந்தமருதின் நாமம் அழிக்கப்பட்டு கல்முனை 18 முதல் 23 வரை வட்டாரங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது .
2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில் மேற்படி 6வட்டாரங்களும் சுயேட்சை குழுவினால் வெற்றி கொள்ளப்பட்டு 9 அங்கத்தவர்கள் கல்முனை மாநகர சபைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இத்தேர்தல் முடிவுகள் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த முடிவாக உங்களால் கூறப்பட்ட அபிலாசை என்ற விடயத்தைப் பறைசாற்றியது.
2018ஆம் ஆண்டு பைசர் முஸ்தபா அவர்கள் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் கொண்டுவந்த கல்முனை நகரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு சுயாதீன குழுவை அமைப்பதற்கும், சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உள்ளூராட்சி சபை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு உங்களது அமைச்சரவை அவதானக் குறிப்பு முழுக்குப் போட்டது என்பதனையும் கூறவேண்டும்.
பின்னர் கூட உங்களைத் தொடர்ந்து வந்த நிலையில், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தீர்கள், அதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
இறுதியாக உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பாத நிலையிலும் நீங்கள் புத்தக வெளியீடு ஒன்றுக்கு ymma கட்டிடத்திற்கு வருவதாக அறிந்து அங்கு வந்து காத்திருந்த நிலையில் சுமார் 5.00 மணி அளவில் வந்த நீங்கள் அவசரமாக சந்திக்க முடியாது, வேண்டுமாயின் கட்சியின் செயலாளரை சந்திக்கச் சொன்னீர்கள். சந்தித்தபோது அவரும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று விலகிக்கொண்டார்.
என்றாலும் கிழக்கு மாகாண சபை தீர்மானம், அம்பாறை மாவட்ட அதிபர் தலைமையிலான குழுவின் தீர்மானம் மற்றும் பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில்தான் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலறி மாளிகையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இக்கூட்டம் அன்றைய அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் பள்ளித் தலைவர் உட்பட 5 பேர் பங்குபற்றினோம்.
இக்கூட்டத்தில்
அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நிர்வாக மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஆராயப்பட்டது.
இதில் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரிஷ், கிழக்கு ஆளுநர், பிரதம செயலாளர், அம்பாறை அரச அதிபர், உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதன் இறுதி முடிவாக சம்பந்தபட்ட அமைச்சினால் அபிலாசைக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது மட்டுமன்றி, அதனையும் உங்கள் தரப்பில் பலர் தடுக்க முயற்சித்த விடயம் மற்றும் அதன் தற்போதைய நிலை கூட நீங்கள் அறியாததல்ல.
அதனால் தான் என்னவோ பிராயச் சித்தமாக, நீங்களே சாய்ந்தமருது மக்களின் அபிலாச்சைக்காக வருந்துவது ஒரு வகையில்
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரத்திற்குச் ஒப்பானது என்றாலும்
சாய்ந்தமருது மக்கள் மீதான உங்கள் கரிசனைக்கு
நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை..
தேங்க்ஸ் தலைவரே.!
A.L.M சலீம்