27/05/2026
இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில் தியாக உணர்வுகள் மென்மேலும் அதிகரிக்க, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகிறேன் என சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,
“விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதர்களுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்லாம் போதிக்கிறது. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வதன் ஊடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார சூழலில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றடுப்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட இப்புனித நாளில் திடசங்கற்பம் பூண வேண்டும். மேலும், இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடன் வாழ நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
இந்தப் புனிதமான ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.