03/09/2020
அரச சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் தொடக்க நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில்...
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நாட்டுக்காக வேலை” கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு அடையாள பூர்வமாக நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
25 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான இந்த நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.
50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரி இருந்தாலும் 60,000 பேரை இணைத்துக்கொள்வதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்தது.
இன்று அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை 50,177 ஆகும்.
அதில் 38,760 பேர் பெண்களாவர்.
தொழில்களைப் பெற்றுக்கொண்டவர்களில் கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 31,172 ஆகும்.
பட்டதாரிகளை வகைப்படுத்தினால் - உள்வாரி பட்டதாரிகள் 29,156 பேரும், வெளிவாரிப் பட்டதாரிகள் 20,322 பேரும், தேரர்கள் 1000 பேரும் இந்த நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.
ஏனைய பட்டதாரிகளில் வனிகத்துறை 1,839, முகாமைத்துவம் 7,278, விஞ்ஞானம் 4,494, சுதேச வைத்தியத்துறை 143, இணை சுகாதாரம் 161, கணனி தொழிநுட்பம் 989, பொறியியலாளர் மற்றும் சட்டம் 233 பேர் உள்ளிட்ட கணக்காய்வு டிப்ளோமாதாரிகள் 1,906 பேரும் அடங்குவர்.
நியமனங்களை பெற்றுக்கொண்டவர்கள் தலைமைத்துவம், திறன் மற்றும் எண்ணக்கரு அபிவிருத்தி பயிற்சிகளுக்கு உள்வாங்கப்படுவர்.
ஒரு வருட கால பயிற்சி நிறைவின் பின்னர் கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள், விவசாய சேவை நிலையங்கள், பிரதேச நீர்ப்பாசன அலுவலகங்கள், வனஜீவராசிகள் அலுவலகம், சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள், மருந்தகங்கள், சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கை அலுவலகம் போன்ற கிராமிய பிரிவுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி செயற்பாட்டுக்கு செயற்திறனுடன் பங்களிக்குமாறு நியமனம் பெற்றவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன்.
அரச சேவைக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சுமையாகாமல் - தாம் பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நியாயமாக நடந்துகொள்ளுமாறும் நான் மேலும் வேண்டிக்கொண்டேன்.